உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Friday, July 20, 2018

சிகப்பு பூ மலர்ந்தது


2016ல் வெளியான ஜங்கிள் புக் திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும், கதையின் நாயகனான சிறுவன் மொக்ளியை குரங்கு கூட்டங்கள் கடத்திச் சென்று அதன் தலைவனாக இருக்கும் கிங் லூயியிடம் கொண்டு சேர்க்கும். தலைவனாக இருக்கும் கிங் லூயி, சிறுவனிடம், மனிதர்கள் பயன்படுத்தும் சிகப்பு பூவை (நெருப்பு) எனக்கு நீ உருவாக்கி தர வேண்டும், அதன் ரகசியத்தை அறிந்து விட்டால் மனிதர்களை போலவே நாங்களும் மாறிவிடுவோம் என்று சொல்லும். ஒரு பேன்டஸி திரைப்படத்தின் காட்சிதான் என்றாலும் மனிதர்களுக்கும் நெருப்பிற்குமான தொடர்பினை வெகு நேர்த்தியாக நமக்குள் செலுத்தி விட்டு போகும் காட்சி இது. நெருப்பை உருவாக்கி, அதனை கட்டுப்படுத்தி, பயன்படுத்தப் பயின்ற மனிதர்கள் அடைந்த பலன்கள் என்ன ? வாருங்கள் பார்க்கலாம்.


சாப்பியன்ஸ் உணவுச்சங்கிலியின் உச்சத்திற்கு வெகு வேகமாக முன்னேறியதற்கு முக்கிய காரணம் அவர்கள் நெருப்பை அன்றாடம் பயன்படுத்த தொடங்கியது தான். சுமார் எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் நெருப்பை அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஹோமோ எரக்டஸ், நியண்டர்தல்கள் மற்றும் சாப்பியன்ஸ்களின் மூதாதயர்கள் நெருப்பை அன்றாடம் பயன்படுத்தும் முறையை பழகினார்கள்.

நெருப்பானது இருட்டில் வெளிச்சத்தையும், கடுங்குளிரில் வெப்பத்தையும், மற்ற வேட்டை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பையும் மனிதர்களுக்கு அளித்தது. கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பைக் கொண்டு வெப்பமண்டல புதர் காடுகளில் எளிமையாக வேட்டையாடி உண்ணத் தொடங்கினார்கள்.

சமையல்...சமையல்...

நெருப்பைப் பயன்படுத்தி சமைக்கக் கற்றுக்கொண்ட பின் கோதுமை, அரிசி, உருளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டார்கள். நெருப்பு, உணவின் வேதித்தன்மையையும், உயிரித்தன்மையையும் வெகுவாக மாற்றியமைத்தது. மிக முக்கியமாக உணவுப் பொருட்களில் இருக்கும் நோய் பரப்பும் கிருமிகளை அழிக்க நெருப்பு வெகுவாக உதவியது.

உணவை வாயிலிட்டு மென்று, விழுங்கி அது செரிமானமாகும் ஒட்டுமொத்த முறையும் இப்போது மனிதர்களுக்கு எளிதாகிப் போனது. நெருப்பினால் சமைத்தல் சாத்தியமாகிய பின் மனிதர்கள் பல வகையான உணவுப் பொருட்களை உட்கொள்ள தொடங்கினார்கள். உணவருந்துவதற்கு அவர்கள் செலவிட்ட நேரமும், பற்களின் அளவும், ஜீரண உறுப்புகளின் அளவும் குறைய தொடங்கியது.
ஜீரண உறுப்புகளின் அளவு குறைய தொடங்கியதும், மூளையின் அளவு பெரியதாக தொடங்கியதும் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நீளமான குடல்களும், அளவில் பெரிய மூளையும் உடலின் ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பவை, எனவே இரண்டையும் ஒரு சேர ஒரே உடலில் கொண்டிருப்பது என்பது ஒரு உயிரிக்கு இயலாத காரியம். ஜீரண உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் பயன்பாடு குறைந்து மூளையின் அளவு பெரிதானதில் சமைத்தல் பெரும் பங்காற்றியது.

மனிதர்களுக்கும், மற்ற பலமிக்க வேட்டை விலங்குகளுக்குமிடையே ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது நெருப்பு தான். பெரும்பாலான வேட்டை விலங்குகளுக்கு அதன் வலுவான உடல் கட்டமைப்பு தான் மிகப்பெரிய  பலம். ஆனால் வேறு எந்த விலங்கும் நெருப்பு போன்றதொரு இயற்கையின் ஆற்றலை கட்டுப்படுத்தி தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவில்லை. உதாரணமாக கழுகுகளால் காற்றிலுள்ள வெப்ப அலைவரிசைகளை அடையாளம் கண்டு அதற்கேற்றவாறு வெப்பக்காற்று மேலேழும் போது, சிறகடித்து உயரே எழுப்ப முடியும். ஆனால் அவைகளால் காற்றில் வெப்ப அலைவரிசைகளை உருவாக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. கழுகுகளை போலன்றி மனிதர்களால் தேவைக்கு ஏற்றவாறு நெருப்பை உருவாக்கி பயன்படுத்த முடியும். ஒற்றை மனிதன் உருவாக்கும் ஒரு சிறு தீப்பொறி ஒட்டுமொத்த காட்டையும் தீக்கிரையாக்கி விடக்கூடும். நெருப்பின் கண்டறிதல் வருங்கால மனிதகுல ஆதிக்கத்தின் தொடக்கப்புள்ளி.

மனிதர்கள் இடம்பெயர்ந்த கதை..... அடுத்த பதிவில் 


Credits: Sapiens - A brief history of humankind by Yuval Noah Harari

Thursday, July 5, 2018

மூளைக்குள்ளே இருந்தது அறிவு !

ஹோமோ பேரினத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் ஒரே மாதிரியான குணாம்சங்களைக் கொண்டிருக்கவில்லை   என்பதைப் பார்த்தோம். ஆனால் பொதுவாகவே மனித இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் அளவில் பெரிய மூளையை கொண்டிருந்தன. சராசரியாக அறுபது கிலோ எடையுள்ள ஒரு பாலூட்டியின் மூளையினுடைய அளவு 200 கன சென்டிமீட்டர்கள். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மூளையினுடைய அளவு 600 கன சென்டிமீட்டர்கள்.


நமது மூளையின் சராசரி அளவு 1200 முதல் 1400 கன சென்டிமீட்டர்கள், மூளையின் அளவு மட்டுமே மனிதர்களின் சிந்திக்கும் திறனை முடிவு செய்யவில்லை. உண்மை என்னவெனில் அளவில் பெரிய மூளை உடலின் ஆற்றல் பயன்பாட்டை அதிகரித்தது. நமது மூளை உடல் எடையில் 2-3 சதவிகிதம் மட்டுமே பங்கு வகித்தாலும், ஓய்வில் இருக்கும் போதும் ஏறக்குறைய 25 சதவிகிதம் ஆற்றலை பயன்படுத்துகிறது. மற்ற உயிரினங்களான குரங்குகளின் மூளையானது ஓய்வு நேரங்களில் வெறும் 8 சதவிகிதம் ஆற்றலையே பயன்படுத்துகிறது.
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் தங்கள் மூளைக்கு தேவையான ஆற்றலைப் பெற இரண்டு மிக முக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒன்று, அவர்கள் அதிக நேரம் உணவு சேகரிக்க வேண்டியிருந்தது. இரண்டு, அவர்களுடைய வலிமையான தசைகளின் பயன்பாடு வெகுவாக குறைந்தது. உடலில் உற்பத்தியான ஆற்றல் சிந்திக்கவும், சிந்தனைகளை ஒருங்கிணைத்து பல சிக்கல்களுக்கு தீர்வு காணவும் பயன்பட  தொடங்கியது.

இன்று நமது சிந்தனைகள் தான் விமானங்களையும், துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் கண்டறிந்திருக்கின்றன. இத்தகைய கண்டுபிடிப்புகளைக் கொண்டு நம்மால் மற்ற உயிரினங்களின் மீது ஆதிக்கம் செலுத்த முடிகிறது. இந்த மாற்றம் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு, உண்மையில் இத்தகைய மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதற்கு அறுதியிட்டு சொல்வதற்கான பதில்கள் நம்மிடமில்லை.

சாப்பியன்ஸ் இன்றும் நிலைத்திருக்க இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் இரண்டு கால்களில் நடக்க துவங்கிய நிகழ்வு. நிமிர்ந்து நிற்க துவங்கிய பிறகு சாப்பியன்ஸ்களால் புல்வெளிகளில் நீண்ட தூரத்திற்கு பார்வையை செலுத்த முடிந்தது. நடமாட்டத்திற்கு பயன்பட்ட முன்னங்கால்கள் இப்போது கல் எறியவும், சக மனிதர்களுக்கு சமிஞ்ஞைகள் செய்யவும் பயன்பட்டன.
சாப்பியன்ஸ் நிமிர்ந்து நடக்கத் தொடங்கியதால் சில எதிர்மறையான விளைவுகளையும் அவர்கள் சந்திக்க நேர்ந்தது. நிமிர்ந்த நிலையில் முதுகெலும்பானது அதிக எடையுள்ள மண்டை ஓட்டை தாங்க வேண்டியிருந்தது. இத்தகைய மாற்றம் அவர்களது முதுகு, தண்டுவடம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தியது. இந்த எதிர்மறை விளைவுகள் பெண்களை இன்னும் மோசமாக பாதித்தது.நிமிர்ந்த நிலையில் பெண்களின் இடுப்பு பகுதி குறுகலாகி குழந்தைப் பிறப்பை கடினமாக்கியது. இப்பிரச்சனைக்கு தீர்வாக தான் சாப்பியன்ஸ் குழந்தைகளின்  பிறப்பு சில மாதங்கள் முன்னதாக நிகழத் தொடங்கியது. இன்றும் கூட மற்ற எல்லா உயிரினங்களை விடவும் மனிதக் குழந்தைகளுக்குத் தான் நீண்ட கால கவனிப்பும், பராமரிப்பும் தேவைப்படுகிறது. தனி நபராக ஒரு தாய் குழந்தைகளை பராமரிக்க கடினமாக இருந்ததால் சாப்பியன்ஸ்களிடையே சமூக அமைப்பு மற்றும் இன குழுக்கள் உருவானது. இன்று மனிதர்களிடையே இருக்கும் சமூகப் பிணைப்பிற்கு பரிணாம வளர்ச்சியே வித்திட்டது.
சாப்பியன்ஸ் குழந்தைகள் பிறக்கும் போது உலையிலிருந்து வெளிவரும் இரும்பு குழம்பு போலவே வெளிவருகிறார்கள், எனவே தான் அவர்களை நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு சிந்தனைகளை செலுத்தி இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, இஸ்லாமியனாகவோ, சமதர்மவாதியாகவோ வடிவமைத்துக் கொள்ள முடிகிறது.

அளவில் பெரிய மூளை, கல் ஆயுதங்களின் பயன்பாடு, சிந்தனைத் திறன் போன்ற திறன்கள் இருந்தும் சாப்பியன்ஸ் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக உணவுச் சங்கிலியின் உயரத்தில் இருந்த வலிமையான வேட்டையாடிகளான புலி, சுறா போன்ற உயிரினங்களுக்கு பயந்தே தான் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, நிலப்பகுதியில் பெரிய வேட்டையாடி உயிரினங்கள் மிச்சம் வைத்த எலும்புகளின் மஜ்ஜையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறார்கள்.

கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளாக தான் மனிதர்கள் தங்களை தலைச்சிறந்த வேட்டையாடிகளாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிங்கம், புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் வெகு மெதுவாகவே உணவுச் சங்கிலியின் உச்சியை நோக்கி நகர்ந்தன, இதனால் இயற்கை அதற்கெற்றவாறு சில தகவமைப்புகளை செய்ய முடிந்தது. குறிப்பாக சிங்கங்கள் வலுவான வேட்டையாடிகளாக பரிணமித்த அதே நேரம் மான்கள் வேகமாக ஓடும் திறனை பெற்றிருந்தன. ஆனால் மனிதர்களின் வேகமான வளர்ச்சிக்கு ஏற்றவாறு இயற்கை தன்னை நேர்படுத்திக் கொள்ள இயலவில்லை. பல லட்சம் ஆண்டுகளாக வலுவான உயிரினங்களைக் கண்டு அஞ்சி வாழ்ந்த மனித இனத்தின் பயமும் இயலாமையும் தான் இன்று நாம் காணும் போர்களுக்கும் சூழலியல் பிரச்சனைகளுக்கும் அடிப்படை என்று எண்ணத் தோன்றுகிறது.

நெருப்பு பிறந்தது.....

அடுத்த பதிவில்...

Credits: Sapiens - A brief history of humankind by Yuval Noah Harari    Buy at Amazon