உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Tuesday, April 14, 2020

அம்பேத்கரை வாசித்தல் #1

இந்தியாவில் சாதிகள்

இந்தியாவில் சாதிகளின் தோற்றம், வளர்ச்சி, அவற்றின் அமைப்பியக்கம் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் இந்திய சமூகத்துக்கு வெளியே இருந்து அதனை கற்றறிய முயன்றவர்கள் (டாக்டர் கெட்கர் போன்ற விதிவிலக்குகள் இருக்கவே செய்கின்றன). டாக்டர் பி. ஆர். அம்பத்கர் இந்தியாவில் சாதிகள் பற்றிய தனது கட்டுரையில் சாதி அமைப்பை அதன் அடிப்படைகளோடு, சமூகவியல் கண்ணோட்டத்தோடு நுட்பமாக அணுகியிருக்கிறார்.


சாதியின் அடிப்படையான இயல்பாக அகமணம் செய்து கொள்ளும் முறையை குறிப்பிட்டு கூறும் அம்பேத்கர், புறமண வழக்கம் தொடக்ககாலச் சமுதாயங்களில் நிலவியது என்கிறார்.

சாதியமும், அது சார்ந்த கட்டுப்பாடுகளும் ஏதோ ஒருவித தெய்வத்தன்மை பொருந்திய மதக் கோட்பாடாக இந்திய மக்களிடம் திணிக்கப்பட்டிருக்கிறது. மதங்களும், சில தத்துவங்களும் சாதியின் பழக்கவழக்கங்களை, சீரிய இலட்சியங்களாக காட்ட பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பது போன்ற கருத்துக்கள் எவ்வளவு உண்மை என்பது இந்திய சமூகத்தின் வரலாற்றையும், சமகால நிகழ்வுகளையும் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு புலனாகும்.

இரத்த தூய்மையைக் காப்பதே சாதி அமைப்பின் நோக்கம் எனக் கூறுவோர், உண்மையில் சாதி தோன்றுவதற்கு முன்பே இந்திய இனங்கள் தமக்குள் இரத்தத்தாலும், கலாச்சாரத்தாலும் கலந்து போயிருந்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார். இந்த கருத்தினை உறுதி செய்யும் அறிவியல் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாவதன் மூலம் அம்பத்கரை ஒரு சிறந்த சமூக விஞ்ஞானி எனப் புரிந்து கொள்ளலாம்.

சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வாக கலப்புமணத்தை முன்வைக்கிறது இக்கட்டுரை. சாதியைப் போற்றுகின்ற மதங்களின் புனிதத்தின் மீதான நம்பிக்கையை ஒழிப்பதும், அவற்றின் அதிகாரங்களை மறுப்பதும் தான் மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்யும் என்கிறார்.  

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்தியாவில் ஏன் வழக்கத்திலிருந்தது? அதற்கான காரணம் என்ன? 

ஏன் குழந்தை திருமணங்கள் ஒரு சமூக வழக்கமாகவே மாறிப் போயிருந்தன?

ஏன் விதவைகள் மறுமணம் இங்கு விலக்கப்பட்டிருந்தது?

இன்றும் கூட கலப்புத் திருமணங்கள் செய்தவர்கள் ஏன் கொலை செய்யப்படுகிறார்கள்?

இன்டர்நெட் யுகத்திலும் Matrimonial களின் வழியே ஏன் அகமணமுறை இன்றும் காப்பாற்றப்படுகிறது?

இத்தகைய சமூக வழக்கங்களுக்கும், சாதிக்குமான உறவுகள் என்ன? 

மதங்கள் ஏன் அதிகாரத்தின் ஆதாரமாக இருக்கின்றன?

இப்படியான பல கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான பதில்களை தருகிறது இப்புத்தகம். இப்பதில்களும், தகவல்களும் சுருக்கமானவையே. ஆனால் இந்திய சமூகத்தில் சாதி என்னும் மனநிலையின் ஆதிக்கம் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்தி விடுகிறது . அம்பத்கரின் சிந்தனைகளை வாசிப்பதற்கான சாளரத்தையும்  திறந்து விடுகிறது.


வாசிப்போம் 

ஏப்ரல் 14 - அம்பேத்கர் பிறந்த தினம்



1 comment:

  1. மீண்டும் அழகிய பதிவு.... சமூக போராளி அம்பேத்காரின் பிறந்த நாளில் அவரின் இந்தியாவில் சாதிகள் என்ற புத்தகத்தை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.... வாசிக்க தூண்டுகிரீர்கள்... வாசித்து விடுகிறேன்

    ReplyDelete