(1962ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு முன் நீதிமன்றத்தில் நெல்சன் மண்டேலா ஆற்றிய உரையின் சுருக்கமான வடிவம். அவருடைய சுயசரிதையான Long Walk to Freedom நூலிலிருந்து)
பல ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்கியில் (Transkei) உள்ள எனது கிராமத்தில் சிறுவனாக இருந்த போது, எங்கள் இனக்குழுவிலுள்ள பெரியவர்கள் கடந்த காலத்தைப் பற்றி சொல்ல கேட்டிருக்கிறேன். வெள்ளையர்கள் இந்த மண்ணில் கால் பதிப்பதற்கு முன்பிருந்த பொன்னான நாட்கள் அவை. இனக்குழுக்களின் தலைவர்களிடம் அதிகாரங்கள் இருந்த போதிலும் ஜனநாயக உணர்வு அவர்களிடமிருந்தது. அந்த நாட்களில் எங்கள் மக்கள் அமைதியாக வாழ முடிந்தது, எந்த தடைகளுமின்றி சுதந்திரமாகவும், நம்பிக்கையோடும் நாடு முழுக்க செல்வதற்கான உரிமை இருந்தது. இந்த அழகிய தேசத்தின் நிலமும், காடுகளும், நதிகளும், பிற வளங்களும் எங்களுக்கானவையாக இருந்தன. அரசும், வணிகமும், ஆயுதங்களும் மக்களுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயே நிர்வாகம் செய்யப்பட்டன.
பண்டைய கால ஆப்பிரிக்க சமூகங்களின் கட்டமைப்பு என்னை வெகுவாக கவர்ந்திருக்கிருக்கிறது. என் அரசியல் பார்வையை உருவாக்கியதிலும், செழுமைப்படுத்தியதிலும் அதற்கு சிறப்பான ஒரு பங்கிருக்கிறது. அச்சமூகங்கங்களில் உற்பத்தியின் மிக முக்கியமான காரணியான நிலம் ஒட்டுமொத்த இனக்குழுவுக்கும் பொதுவானதாக இருந்தது. தனியுடைமை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. வர்க்க பேதமோ, சுரண்டலோ இல்லாத ஒரு சமூகமாக அது பரிணமித்தது. எல்லாரும் சுதந்திரமான, சமமான மனிதர்கள் என்கிற கோட்பாடே எங்கள் நிர்வாகங்களின் அடிப்படையாக அமைந்தது. இத்தகைய கோட்பாடுகளை பல்வேறு இனக்குழுக்களை நிர்வகிக்கும் அவைகளின் (Councils) அமைப்புச் சட்டங்களிலும் நீங்கள் காண முடியும். இந்த அவைகள் யாவும் மக்கள்மயபடுத்தப்பட்டிருந்தன. எல்லா மக்களும் அவை முன்னெடுக்கும் விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்தினை முன்வைக்கிற நிலை அன்றிருந்தது.
இன்றைய சூழலின் தேவைகளுக்கு மிகவும் பழமையானதாகவும், பாதுகாப்பற்றதாகவும் கருதப்படும் இச்சமூக அமைப்பு தான் புரட்சிகர ஜனநாயகத்தின் விதைகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய சமூக அமைப்பில் அடிமைத்தனமும், வறுமையும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையும் ஒரு போதும் இருக்காது. இப்படிப்பட்ட ஆப்பிரிக்காவின் வரலாறு தான் இன்றும் போராடுகிற எனக்கும், என் தோழர்களுக்கும் உத்வேகம் தரக் கூடியதாக இருக்கிறது.
இந்த நாட்டில் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு ஆப்பிரிக்கனும் ஒரு விதமான முரண்பாட்டை உணர்ந்து கொண்டே இருக்கிறான். தன்னுடைய மனச்சாட்சிக்கும், இந்த நாட்டில் அமலில் இருக்கும் சட்டங்களுக்கும் இடையிலான பெரிய முரண்பாடு அது. இவ்விதமான முரண்பாடு இந்த நாட்டு குடிமக்கள் மட்டுமே உணரக் கூடிய ஒன்றல்ல, எங்கெல்லாம் சிந்திக்கத் தெரிந்த, கூர்மையான உணர்வுகள் கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் எல்லோருமே இத்தகைய முரண்பாட்டை உணர்வார்கள். மேற்கத்திய தத்துவியலாளரான பெர்ட்ரண்டு ரசல் பிரிட்டனில், அந்நாட்டின் அணுஆயுத கொள்கைக்கு எதிராக குரலெழுப்பியதையும், அதற்காக அவர் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டதையும் ஒரு உதாரணமாக உங்கள் முன் சொல்ல விரும்புகிறேன். அவர் இத்தகைய விளைவுகளை தான் எதிர்கொள்ளக் கூடும் எனத் தெரிந்தே மக்களுக்கு நன்மை தராத தனது நாட்டின் கொள்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்தார். நானும், இன்னும் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு ஆப்பிரிக்கனும் அதைத் தான் செய்ய முயற்சி செய்கிறோம்.
இங்கு அமலில் இருக்கும் பல சட்டங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. ஆட்சியில் இருக்கும் தேசியவாத அரசினால் (Nationalist Party Government) எழுதப்பட்ட எல்லா சட்டங்களுமே அறமற்றது, அநீதியானது, சகித்துக் கொள்ள இயலாதது. நாங்கள் இத்தகைய சட்டங்களை வலுவாக எதிர்க்கிறோம், அவற்றிற்கு எதிராக கடுமையாக போராடுகிறோம், அவற்றை மாற்றி எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
இன்று நான் சில சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறேன், நான் செய்த செயல்களுக்காக அல்ல. மாறாக, எந்த மதிப்பீடுகளுக்களாக நான் போராடுகிறேனோ அதற்காக, என் சிந்தனைகளுக்காக. இப்படிப்பட்ட உயரிய இலட்சியங்களுக்காக போராடுகிறவர்களை சட்டவிரோதி எனப் புறக்கணிப்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களின் படி சில மாதங்கள் நான் சட்ட விரோதியாக தலைமறைவு வாழ்க்கை தான் வாழ்ந்துள்ளேன்.
கடந்த சில மாதங்களில் என் மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வாழ்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. அன்றாடம் அலுவலக வேலைகள் முடிந்த பின்னர் என் குடும்பத்தினருடன் உணவருந்துவதே பெரிதும் விரும்புகிறேன். ஆனால் உண்மையில் என் தாய்நாட்டில், சொந்தங்களையும், நண்பர்களையும் பிரிந்து காவல்துறையால் தொடர்ந்து துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். இப்படி வாழ்வது சிறையில் தண்டனை அனுபவிப்பதை விடக் கொடுமையானது. ஒரு நாகரிகமான சமுதாயத்தில் வாழுகிற எந்த மனிதனும் இத்தகைய வாழ்க்கையை விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை எனக் கருதுகிறேன்.
சில வேளைகளில், சில மனிதர்களுக்கு என் வாழ்க்கையில் நடந்ததைப் போன்று அவர்கள் விரும்பிய இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படலாம். அரசுகளின் சட்டங்கள் அவர்களை சட்டவிரோதியாக வாழ நிர்பந்திக்கலாம். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இப்படி வாழ நேர்ந்ததற்காக நான் ஒரு போதும் வருத்தமடையப் போவதில்லை. என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகள் சரியானவை என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இந்த நாட்டில் வாழும் இன்னும் பல மக்களும் இந்த அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாவார்கள் என்பதையும் கூட என்னால் வெகு நிச்சயமாக சொல்ல முடியும்.
நீங்கள் தண்டனைகளை தருவதன் மூலம் ஒரு மனிதனின் நம்பிக்கையை அழித்து விடலாம் என நினைக்கிறீர்கள். அறம் சார்ந்து வாழ்கிற மனிதர்களின் நம்பிக்கையை எந்த தண்டனையும் உருக்குலைத்து விடாது என்பதற்கு வரலாற்றின் பக்கங்களில் சாட்சிகள் இருக்கின்றன. நீங்கள் தரப்போகிற தண்டனைகள் என்னையோ, என் தோழர்களையோ, என் மக்களையோ இந்த போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கப் போவதில்லை.
நம் நாட்டின் சிறைகளில் ஆப்பிரிக்கர்களின் நிலை எவ்வளவு மோசமானது என்பது தெரிந்த போதிலும் இந்த நீதிமன்றம் விதிக்கப் போகிற தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராகவே இருக்கிறேன். இந்த நாடு முழுக்க என் மக்கள் நிறத்தின் பெயரால் படும் இன்னல்களையும், பாகுபாடுகளையும் நினைக்கும் போது சிறையின் சுவர்களுக்குள் நான் அடையப் போகிற இன்னல்கள் அவ்வளவு கொடுமையானதாக இருக்காது என நம்புகிறேன்.
மீண்டுமொரு முறை உரக்கச் சொல்கிறேன், நீங்கள் தரப்போகிற தண்டனைகள் என்னையோ, என் தோழர்களையோ, என் மக்களையோ இந்த போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கப் போவதில்லை. மாறாக, அது சொந்த மண்ணில் விடுதலை நோக்கிய நெடும்பயணத்திற்கு தூண்டுகோலாகவே இருக்கப் போகிறது. தண்டனைக் காலம் முடிந்தவுடன் ஓய்ந்து விடுவேன் என நினைத்து விடாதீர்கள். என் மக்கள் எதிர்கொள்கிற அத்தனை அநீதிகளும் முழுமையாக அழித்தொழிக்கப்படும் வரை நான் இயங்கிக் கொண்டே இருப்பேன்.
என் மக்களுக்காகவும், தென்னாப்பிரிக்காவுக்குமான என் கடமைகளைச் செய்து விட்டேன். எதிர்கால தலைமுறை நான் குற்றமற்றவன் என முடிவு செய்யும் என்பதிலும், நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய உண்மையான குற்றவாளிகள் இந்த அரசின் உறுப்பினர்கள் தான் என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
Book Courtesy: Fr. Sebastian :)
No comments:
Post a Comment