உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Thursday, June 28, 2018

மனித குலத்தின் தொடக்கம்

கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக நமது ஹோமோ சாப்பியன்ஸ் பிரிவைச் சேர்ந்த மனித இனம் மட்டும் தான் இந்த பூமியில் வாழ்ந்து, ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. ஹோமோ என்பது பேரினத்தைக் (Genus) குறிக்கும் சொல், சாப்பியன்ஸ் என்பது இனத்தைக் (Species) குறிக்கும் சொல். ஹோமோ பேரினத்தைச் சார்ந்த பல்வேறு உயிரினங்கள் பரிணமித்து இவ்வுலகில் வாழ்ந்து, புதைப்படிமங்களாகி போனதன் வரலாறு இது. அத்தகைய உயிரினங்களைக் குறிக்க மனிதர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். நவீன மனிதர்களான நம்மைக் குறிப்பிட சாப்பியன்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்.

மனிதர்கள் எங்கே, எப்படி தோன்றினார்கள்? 

இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் Australopithecus பேரினத்தைச் சார்ந்த குரங்குகளிலிருந்து பரிணமித்து முதன்முதலில் மனிதர்கள் தோன்றினார்கள். அங்கிருந்து வடக்கு ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள்.

மாறுபட்ட குணநலங்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்கள் இப்புவியில் வாழ்ந்தனவா?

ஐரோப்பா மற்றும் மேற்காசிய பகுதிகளில் வாழ்ந்த மனித இனத்தை நியன்டர்தல்கள் (Neanderthals) என்கிறோம். இந்த நியன்டர்தல்கள் சாப்பியன்சை விட உருவில் பெரியவர்களாகவும், மேற்கு யூரேசிய பகுதியின் கடுங்குளிருக்கு தகவமைத்துக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஆசியாவின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்களை ஹோமோ எரக்டஸ் (Homo erectus) என்கிறோம். இந்த இனத்தைச் சார்ந்த உயிரினங்கள் ஏறக்குறைய இரண்டு மில்லியன் ஆண்டுகள் இவ்வுலகில் நிலைபெற்று வாழ்ந்திருக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜாவா தீவுப் பகுதியில் வாழ்ந்த உயிரினங்கள் Homo soloensis எனப்பட்டன, இவை வெப்பமண்டல பிரதேசத்தின் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு வாழ்ந்தன. மற்றுமொரு இந்தோனேசிய தீவான புளோரெஸில் வாழ்ந்த மனிதர்கள் குள்ளத்தன்மை உடையவர்களாக இருந்தனர். கடலில் நீர்மட்டம் குறைவாக இருந்த போது இத்தீவிற்கு இடம் பெயர்ந்த இவர்கள் கடல் மட்டம் உயர்ந்தவுடன் வளங்கள் குறைந்த தீவிற்குள் மாட்டிக் கொண்டனர். காலப்போக்கில் அதிக உணவு தேவைப்படும் உருவில் பெரிய உயிரிகள் அழியவே உருவத்தில் சிறியவர்கள் பிழைத்து வாழத் தொடங்கினர். உயரம், ஒரு மீட்டருக்கு மிகாமலும், எடை, இருபத்தி ஐந்து கிலோவிற்கு மிகாமலும் இருந்த இந்த மனிதர்களை Homo floresiensis  என்று வகைப்படுத்துகிறார்கள் அறிவியலாளர்கள்.
2010ம் ஆண்டு செர்பியாவின் டெனிசோவா குகையில் கண்டெடுக்கப்பட்ட விரல் எலும்பின் புதைப்படிமமானது இன்னொரு மனித இனமான Homo denisova  வினுடையது என்று கண்டறியப்பட்டது. இன்னும் ஏதேனும் குகைகளில், தீவுகளில் அல்லது பெருங்கடல்களின் ஆழங்களில் இது போன்ற புதைபடிமங்கள் கண்டறியப்படுவதற்கு காத்திருக்கலாம்.

ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மனித இனங்கள் பரிணமித்துக் கொண்டிருந்த நேரம், மனித இனத்தின் பிறப்பிடமாக கருதப்படும் கிழக்கு ஆப்ரிக்காவிலும் பரிணாம வளர்ச்சி Homo rudolfensis, Homo ergaster, Homo sapiens போன்ற புதிய இனங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தது.
மேற்குறிப்பிட்ட அனைத்து இனங்களிலும் மனிதர்கள் ஒரே குணாதிசயம் கொண்டவர்களாக இல்லை. சில இனங்களில் அவர்கள் உருவத்தில் பெரியவர்களாகவும், பலசாலிகளாகவும், பயமறியா வேட்டையாடிகளாகவும் இருந்தார்கள், சில இனத்தை சார்ந்தவர்கள் உருவத்தில் சிறியவர்களாகவும், தாவரங்களிலிருந்து உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்தார்கள். சிலர் தனித்தீவுகளில் வாழ்ந்தார்கள், சிலரோ கண்டம் விட்டு கண்டம் இடம் பெயர்ந்தார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் ஹோமா என்னும் பேரினத்தைச் சார்ந்தவர்கள், மனிதர்கள்.

பொதுவாக பரிணாம வளர்ச்சியை காலக்கிரமமாக வரிசைப்படுத்தும் போது நேர்க்கோட்டில் வரிசைப்படுத்துகிறோம். அதாவது ஒரு இனம் வாழ்ந்து மறைந்த பிறகே அடுத்த இனம் பரிணமித்திருக்கும் என்ற எண்ணம் அடிப்படையில் தவறானது. உண்மை என்னவெனில் இரண்டு மில்லியன் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த உலகம் ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்களுக்கு தாயகமாக இருந்திருக்கிறது. பொய் என்கிறீர்களா? தற்போது இந்த உலகில் நமது சக உயிரிகளாக வாழும் சிங்கம், புலி, பனிச்சிறுத்தை போன்ற விலங்குகள் Panthera  எனும் ஒரே பேரினத்தைச் சார்ந்தவை, இந்த தர்க்கத்தின்படி பார்த்தால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பூமியில் பல்வேறு இனங்களைச் சார்ந்த மனிதர்கள் வாழ்ந்திருப்பார்கள் தானே.

ஹோமா பேரினத்தைச் சார்ந்த மற்ற உயிரினங்கள் யாவும் காலப்போக்கில் முற்றிலுமாக அழிந்து விட சாப்பியன்ஸ் மட்டும் நிலைத்திருக்க காரணமென்ன? அடுத்த பதிவில்..


Credits: Sapiens - A brief history of humankind by Yuval Noah Harari  Buy at Amazon


Thursday, June 21, 2018

அறிவியல் = இயற்பியல் + வேதியியல் + உயிரியல்

13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பின் (Big Bang) போது பருப்பொருள், ஆற்றல், நேரம், காலம் போன்றவை தோன்றின. நமது அண்டத்தின் இத்தகைய அடிப்படை அம்சங்களைப் பற்றி படிப்பதைத் தான் நாம் இயற்பியல் என்கிறோம்.
அண்டம் தோன்றி மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பருப்பொருளும், ஆற்றலும் ஒன்றுதிரண்டு அணுக்களாயின, அணுக்கள் ஒன்றிணைந்து மூலக்கூறுகளாயின இதனைத் தான் நாம் வேதியியல் என்கிறோம்.
3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியில் சில மூலக்கூறுகள் ஒன்றிணைந்து உயிரினங்கள் தோன்றின, இந்த நிகழ்வினையும், உயிரினங்களின் இயக்கத்தையும் தான் உயிரியல் என்கிறோம்.


ஏறக்குறைய எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமா சாப்பியன்ஸ் எனும் உயிரினங்கள் கலாச்சாரம் என்னும் மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கின, காலச்சக்கரத்தில் கலாச்சார வளர்ச்சியின் தொகுப்பையே வரலாறு என்கிறோம். மனிதகுல வரலாற்றின் வழிநெடுகே மூன்று மிகப்பெரும் புரட்சிகள் நடந்தேறியிருக்கின்றன. எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சிந்தனைப் புரட்சி மனித மனதின் எல்லைகளை விரிவுபடுத்தியது. அதன் பின்னர் ஏற்பட்ட விவசாயப் புரட்சி உணவு தேடுவதில் இருந்த சிரமங்களைப் போக்கி, மனிதகுலம் கலாச்சார கட்டமைப்புகளை உருவாக்க வழிகோலியது. மூன்றாவதாக மிகச் சமீபத்தில் 500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட அறிவியல் புரட்சி மனித குலம் மற்ற எல்லா உயிரினங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி, இப்புவியை தனது தேவைக்கேற்றவாறு மாற்றியமைக்க உதவியிருக்கிறது. இந்த மூன்று பெரும் நிகழ்வுகளும் மனிதர்களிடமும், பிற உயிரினங்களிடமும் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையே இந்த தொடரில் காணப் போகிறோம்.

வரலாறு வரையறுக்கப்படுவதற்கு முன்பே மனிதர்கள் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள். நவீன கால மனிதர்களை ஒத்த  விலங்குகள் இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின. ஆனால் பல நூற்றாண்டுகளாக அவற்றால் எண்ணற்ற வேறு உயிரினங்களின் மீது ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் நட்போடும், அதிகாரத்திற்காக சமர் புரிந்து கொண்டும் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை சிம்பன்சிகளைப் போலவும், யானைகளைப் போலவுமே இருந்திருக்கிறது. அவர்களுடைய சந்ததியினர் பிற்காலத்தில் நிலவில் கால் பதிப்பார்கள், அணுவின் ஆற்றலை கண்டறிவார்கள், மரபணுக் குறியீடுகளை அலசி ஆராய்வார்கள், வரலாற்று புத்தகங்களை எழுதுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் அவர்களிடம் தென்படவேயில்லை.  வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் சுற்றுச்சூழலின் மீது எந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாதவர்களாகவே இருந்தார்கள். 


பரிணாம வளர்ச்சிப் பாதையில் நாம் இப்போது காணும் எல்லா உயிரினங்களுக்கும் பெரும்பாலும் தங்களுடைய மூதாதைய உயிரின பிரிவிலிருந்து தோன்றியவையே. உதாரணமாக நம் வீட்டில் வளரும் பூனையில் இருந்து சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் அனைத்தும் பெலிடே (Felidae) எனும் பூனைக் குடும்பத்தைச் சார்ந்தவை. அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவில் பூனைக் குடும்பத்தில் இன்று நாம் காணும் விலங்குகள் அனைத்தும் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மூதாதய உயிரினத்திலிருந்து தோன்றியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மேற்கூறிய கோட்பாட்டின்படி ஹோமா சாப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதர்களான நமக்கு மூதாதயர்களாக குரங்குகளைச் சொல்லலாம், சிம்பன்சிகள், கொரில்லாக்கள், உராங்குட்டான்கள் போன்றவை நம்முடைய நெருங்கிய உறவினர்கள்.
(1 பில்லியன் = 100 கோடி)    (1 மில்லியன் = 10 இலட்சம்)

மனிதர்கள் எங்கே, எப்படி தோன்றினார்கள்?
மாறுபட்ட குணநலன்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்கள் இப்புவியில் வாழ்ந்தனவா?
பதில்கள்....அடுத்த பதிவில்..


Credits: Sapiens - A brief history of humankind by Yuval Noah Harari  Buy at Amazon

Tuesday, June 5, 2018

வாசிப்போம். #1



 வரலாறு பிடிக்குமா உங்களுக்கு?



பள்ளிப் பருவத்தில் நாம் படித்த வரலாற்று புத்தகங்கள் எல்லாம் அரசுகளின், அதிகார வர்க்கங்களின் வரலாறாகவே இருந்திருக்கிறது. அறிவியல் பார்வையில், மனிதகுல வரலாற்றை படிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். அந்த வகையில் இணைய தேடலின் போது கண்ணில் பட்டது Yuval Noah Harari எழுதிய Sapiens - A Brief History of Humankind.

பொதுவாகவே வரலாற்று நூல்கள் நிகழ்வுகளின் தொகுப்புகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும், பேரரசுகள், சாம்ராஜ்யங்கள், போர்கள் இவற்றையே வரலாறாக படித்திருக்கிறோம். இந்த புத்தகம் ஒட்டுமொத்த மனித குல வரலாற்றை அறிவியல் பார்வையில் அணுகுவதோடு, எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

மனிதகுல வளர்ச்சி என்பது சிந்தனைப் புரட்சி, விவசாய புரட்சி மற்றும் அறிவியல் புரட்சி போன்ற மூன்று பெரும் நிகழ்வுகளை உள்ளடக்கியது என்கிறார் ஹராரி. மதங்களும், கடவுள்களும், மனித உரிமைகளும் மனித மனதின் உருவாக்கங்கள் என்கிறார். முழு புத்தகத்தையும் வாசித்து முடிக்கும் போது  நீங்கள் இது வரைக்கும் கொண்டிருந்த பல நம்பிக்கைகள் கேள்விக்குள் ளாக்கப்படலாம். கேள்விகள் கேட்பதும், விடைகளை தேடுவதும், மாற்றங்களை ஏற்பதும் தானே அறிவியல்.