உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Wednesday, July 29, 2015

Pluto-flyby mission by NASA

New Horizons
  • First dedicated spacecraft platform to explore Pluto
  •  Launched in 2006, closest approach was on July 14, 2015
  • Closest point – 12,500 km from Pluto’s surface at a velocity of 14 km/s
  • New Horizons science payload The science payload includes seven instruments:
    • Ralph: Visible and infrared imager/spectrometer; provides color, composition and thermal maps.
    • Alice: Ultraviolet imaging spectrometer; analyzes composition and structure of Pluto's atmosphere and looks for atmospheres around Charon and Kuiper Belt Objects (KBOs).
    • REX: (Radio Science Experiment) Measures atmospheric composition and temperature; passive radiometer.
    • LORRI: (Long Range Reconnaissance Imager) telescopic camera; obtains encounter data at long distances, maps Pluto's far side and provides high resolution geologic data.
    • SWAP: (Solar Wind around Pluto) Solar wind and plasma spectrometer; measures atmospheric "escape rate" and observes Pluto's interaction with solar wind.
    •  PEPSSI: (Pluto Energetic Particle Spectrometer Science Investigation) Energetic particle spectrometer; measures the composition and density of plasma (ions) escaping from Pluto's atmosphere.
    • SDC: (Student Dust Counter) Built and operated by students; measures the space dust peppering New Horizons during its voyage across the solar system.
One way communication time is 4hrs 25 mins.


Pluto's "heart" and other surface details are visible in this stunning false-color view of the dwarf planet, which was captured by NASA's New Horizons spacecraft on July 14, 2015.


Pluto & The Kuiper Belt
  • Pluto was discovered in 1930 as the ninth planet of the Solar system.
  • Twenty years after its discovery, astronomers postulated the presence of the Kuiper Belt, comprising a vast collection of icy objects beyond the orbit of Neptune, in which Pluto itself was a member.
  • The first Kuiper Belt Object (KBO) was discovered in 1992 — throwing doubt over Pluto’s status as planet — and since then observers have found more than 1,000 KBOs, with diameters ranging from 50 kms to almost 2,400 kms.
  • The International Astronomical Union in 2006 chose to classify Pluto and the recently discovered large Kuiper Belt Objects as dwarf planets.
Why research on Pluto and The Kuiper Belt is so important?

The Kuiper Belt contains a sizable supply of ancient, icy and organic material that are held in deep freeze, and that were left over from the birth pangs of the planets, containing evidences of the distant past. Because of this, planetary scientists are keen to learn more about Pluto and its moons, Charon (the largest), Styx, Nix, Kerberos and Hydra, and other objects in the Kuiper Belt.

Scientists believe that Pluto’s atmosphere loses a lot of mass into space. The thermal energy of typical molecules in the upper atmosphere is sufficient to escape Pluto’s gravitational hold, a process called hydrodynamic escape. The same may have been responsible for the rapid loss of hydrogen from Earth’s atmosphere early in our planet’s history, making Earth suitable for life. Pluto is the only place in the solar system where we can study hydrodynamic escape on a planetary scale today.

Another important connection between Pluto and life on Earth is the likely presence of organic compounds more complex than the frozen methane on Pluto’s surface and water ice inside the dwarf planet. Recent observations of smaller KBOs show that they are also most likely to harbor large amounts of ice and organic substances. Such objects are considered to have routinely strayed into the inner part of the solar system billions of years ago, collided with Earth, and helped to seed the young Earth with the building blocks of life. Given all these scientific motivations, it is understandable why there is increased scientific interest in Pluto and the Kuiper Belt.

For more details: http://www.thehindu.com/opinion/op-ed/all-eyes-on-pluto/article7470864.ece
Photo Courtesy: www.space.com 

Tuesday, July 28, 2015

பூமியை பலப்படுத்துவோம்

ஏப்ரல்-22, உலக புவி தினம் (World Earth Day), ஜூன் -5, உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) என நாம் வாழும் இந்த அருமையான பூமியின் நலன் காக்க பல சிறப்புத் தினங்களை ஏற்படுத்தி, பெரும் விழாக்களாக கொண்டாடுகிறோம். எதற்காக இந்த தினங்கள்? ஏன் இத்தனை கொண்டாட்டங்கள்? நல்ல பல மாற்றங்கள் வேகமாக நிகழும் இந்த நவீன உலகமானது எதிர்மறையான சில விளைவுகளையும் தன்னகத்தே கொண்டே பரிணமித்துக் கொண்டிருக்கிறது.
பருவநிலை மாற்றம் (Climate Change) கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு தீய விளைவுகளை இப்புவியில் ஏற்படுத்தியிருக்கிறது. அண்மை காலங்களில் உலகெங்கிலும் நிகழ்ந்து வருகிற பெரும் வெள்ளப்பெருக்குகள், சூறாவளிகள், வறட்சி நிலைமைகள், நில நடுக்கங்கள், கடல்மட்ட உயர்வால் மூழ்குகிற குட்டித்தீவுகள் என இன்னும் ஏனைய இயற்கை பேரிடர்கள் புவிக்கோளத்தின் உயிர்ப்பிழைப்பு குறித்த அபாயகரமான கேள்வியை நம்முன் எழுப்பி வருகிறது.
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வளங்கள் நிறைந்த இப்புவிக்கோளத்தை சேதமில்லாமல் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய முயற்சிகளை முன்னேடுக்கவும் இத்தகைய தினங்கள் இன்றைய காலத்தின் தேவைகளாகி விட்டன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம்

இன்று பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுவோர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP) அதிகரிப்பு தான் வளர்ச்சி என்கின்றனர். ஆனால் ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பல்வேறு காரணிகளை உள்ளடக்கியது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாடு போன்றவற்றுடன் சூழியல் தொடர்புடைய காரணிகளும் வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றமும் அவை தொழிற்சாலை உற்பத்தியில் ஏற்படுத்திய மாற்றங்களும் மானுட வாழ்க்கையையும் அது இயங்கும் சூழலையும் முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் பூமியும், பூமியின் இயற்கைச் சூழலும் பாழ்படுத்தப்பட்டிருக்கிறது. பூமியின் இயங்கு சூழல் மாற்றத்தால் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு புவி வெப்பமயமாகியிருக்கிறது. கடந்த 131 ஆண்டுகளில் 2010-ம் ஆண்டு தான் அதிக வெப்பம் வாய்த்த ஆண்டென உலக வெப்ப அளவீட்டு கருவிகள் மற்றும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. உலகவெப்பமயமாக்கத்தால் (Global Warming) உருச்சிதையும் ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பனிப்பாறைகள் பெரிய அளவில் கடல்மட்டத்தை உயர வைத்து விடும். இதே அளவில் வெப்பமயமாக்கம் தொடர்ந்தால் பல தீவு நாடுகள் நீரில் முழ்க நேரிடும், மேலும் பல கோடி மக்கள் கடும் அழிவுகளை சந்திப்பார்கள். எனவே தான் ஐ.நா.வின் அங்கமான ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (United Nations Environment Programme - UNEP) இவ்வாண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தினை ‘குரலை உயர்த்துவோம் கடல் மட்டத்தை அல்ல’ ((Raise your Voice, not the Sea Level) என்ற தலைப்புடன் அனுசரித்தது.

பருவநிலை மாற்றத்திற்கான காரணம்

இன்றைய தொழில்யுகத்தின் பொருளுற்பத்திக்கான மூல வளங்களை வழங்குவதில் பெரும் பங்களிப்பு செய்வது புதைபடிம எரிபொருள்கள்  (Fossil Fuels) ஆகும். நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருள்கள் தொழிற்சாலைகள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இப்புதைபடிம எரிபொருட்கள் அதிக அளவிலான பசுமைக்குடில் வாயுக்களான (Green House Gases) கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய ஏழு கோடி டன் பசுமைக்குடில் வாயுக்கள் திணிக்கப்படுகிறது. இதில் பாதி அளவு கூட கடல்களாலோ, காடுகளாலோ மறுசுழற்சி செய்ய முடியாதவை. வளிமண்டலத்தின் மீதான அளவுக்கு அதிகமான பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வால் பசுமைக்குடில் அடுக்கானது அதிக அளவிலான சூரிய வெப்ப கதிர்களை பூமிக்குள் ஈர்த்து அனுப்பத் தொடங்குகிறது. இதனால் புவியின் சராசரி வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்வதோடு வளிமண்டலத்தின் தட்பவெப்ப சமநிலையையும் சீர்குலைக்கிறது.

புவியின் வெப்பம் தணிக்க

பருவநிலை மாற்றம் தொடர்பான சூழலியல் போராட்டங்களை 90களில் பல பசுமை இயக்கங்கள் முன்னெடுத்தன. மனித இனம் சூழலியல் சிக்கல்களுக்கு தீர்வை நோக்கி நகர வேண்டும் என்று வற்புறுத்திய அவ்வியக்கங்கள், சமூக-அரசியல் தளத்தில் அதிர்வலைகளை உண்டாக்கின. இதன் விளைவாக 1992-ம் ஆண்டு பருவ நிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) என்னும் ஒப்பந்தம் ரியோ டி ஜெனிரோ நகரில் 154 நாடுகளால் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின் உலகநாடுகளால் வெளியிடப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் விகிதத்தினை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகள் (Conference of Parties - COP) நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 20 முறை இம்மாநாடுகள் நடந்துள்ளன. இறுதியாக 2013 நவம்பர் மாதம் COP - 20 மாநாடு பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்றது. விவாதங்களின் முடிவில் சில நல்ல முடிவுகள் எட்டப்பட்டாலும், இம்மாநாடுகளில் முன்மொழியப்பட்ட செயல்திட்டங்கள் முழு செயலாக்கம் பெறுகின்றனவா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.
இன்றைய காலச்சூழலில் பெருநிறுவனங்கள் சமூகத்தின் தேவையை மட்டுமே இலக்காக கொண்டு தன் உற்பத்தி அமைப்பை ஒழுங்கமைப்பதில்லை. மாறாக விரைவான உற்பத்தி மற்றும் அதிகமான லாபம் என்ற கோட்பாட்டை மையப்படுத்தி தான் தங்களது உற்பத்தி முறையை ஒழுங்கமைக்கின்றன. இதன் விளைவாக இயற்கை வளங்கள் வேகமாக அழிக்கப்படுவதும், ஏழை தொழிலாளர்களின் கடின உழைப்பு சுரண்டப்படுவதும், இயற்கையில் நச்சுப் பொருட்கள் திணிக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. வளமான, பலமான நமது பூமி வெகுவிரைவாக பலமிழந்து வருகிறது. இந்த புவியை மீண்டும் பலமாக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டிருக்கிறது. இந்த பூமியின் குடிமக்களாக அதன் வளங்களை அனுபவித்து வாழும் நாம் அனைவரிலும் நமது அடுத்த தலைமுறையிடம் இந்த பூமியை எப்படி அளிக்கப் போகிறோம்? என்கிற கேள்வி எழ வேண்டும்.

நல்ல காற்று, சுத்தமான குடிநீர், ஒலிமாசற்ற சுற்றுச்சூழல் போன்றவை இருந்தால் தான் சிந்திக்கிற, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும். இத்தகைய நிறைவுகளை அடையும் போது தான் அது ஒரு நிலையான வளர்ச்சி என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சூழலை சிதைத்து இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக சுரண்டும் உற்பத்தி முறையில் தீவிர மாற்றங்கள் நிகழ வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும் வளர்ந்த நாடுகளும் இதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  

சிகரம் டைஜஸ்ட், ஜூன், ஜூலை 2014

பயணங்கள் தொடரும்..
சவால்களையும், சாதனைகளையும் தேடி...
.

Sunday, July 19, 2015

போலியோ இல்லாத இந்தியாவை நோக்கி...

தனது தாயாருடன் ருக்ஷார் காதூன்

ஜனவரி 13, 2011 இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ருக்ஷார் காதூன் என்கிற 18 மாத குழந்தையை நம்மில் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இளம்பிள்ளை வாத நோயால் (போலியோ) கால்கள் முடக்கப்பட்டு தற்போது தனது ஐந்தாவது பிறந்தநாளை நோக்கி காத்திருக்கும் இந்த சிறுமி தான் இந்தியாவில் போலியோ தாக்குதலுக்குள்ளான கடைசி நபர். இவ்வருடம் (2014) ஜனவரி 13 -ஆம் நாள் ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டிய பிறகு தான் போலியோவின் தாக்கம் எத்தகையது, அதனால் பாதிக்கப்பட்டு தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்தவர்கள் எத்தனை இலட்சம் என்பதை நாம் திருப்பி பார்த்திருப்போம். நாடு முழுவதுமுள்ள சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், ருக்ஷாருக்கு பிறகு எந்தவொரு போலியோ பாதிப்பும் இந்தியாவில் பதிவாகவில்லை. சுமார் 120 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரு கொடிய நோயை முற்றிலும் ஒழித்திருக்கிறோம். இந்நிகழ்வானது பொதுச்சுகாதாரத்தில் ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகிறது. 

போலியோ நோயைப் பற்றி

இளம்பிள்ளை வாதம் என்றழைக்கப்படும் இந்நோய் பாதிக்கப்பட்டவரின் மலம், மலத்துகள்களால் மாசடைந்த நீர், உணவு ஆகியவற்றின் மூலம் பரவும் ஒரு தொற்று நோயாகும், பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை எளிதாக தாக்கும் போலியோ நுண்கிருமி, பாதிக்கப்பட்டவரின் இரத்த ஓட்டத்துடன் கலந்து, மைய நரம்பு தொகுதிக்கு (Central Nervous System) சென்று, இயக்க நரம்பணுக்களை (Motor Neurons) தாக்குவதால் தசைநார்கள் (Muscle Fibres) பலவீனமுற்று தீவிரமான தளர்வாதம் (Paralysis) உருவாகிறது. பொதுவாக இந்நோய் கால் தசைகளை தாக்கி, செயல்பாடற்றதாக மாற்றி, நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இந்தியாவில் போலியோ

1980-களில் இந்தியா முழுவதும் ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் முதல் நான்கு லட்சம் குழந்தைகள் போலியோ நோய் தாக்குதலுக்கு உள்ளாயினர். நாளொன்றுக்கு 500 முதல் 1000 பேரிடம் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டது. தளர்வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 1000 பேருக்கு இருவர் உயிரிழந்தனர். நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் ஒரு சதவிகிதம் பேருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்தது. சுகாதாரமற்ற திறந்தவெளி கழிப்பிடங்கள் நோய் பரவலை அதிகப்படுத்தியது.

போலியோவிற்கு எதிரான போர்

1988-ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) போலியோவிற்கு எதிரான உலகளாவிய இயக்கத்தை (Global Movement for Polio Eradication) தோற்றுவித்து தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் போலியோ தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, Oral Polio Vaccine எனப்படும் வாய்வழி சொட்டு மருந்தையும் அறிமுகப்படுத்தியது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF), ரோட்டரி பவுண்டேஷன் மற்றும் பல்வேறு நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு போலியோ தடுப்பு நடவடிக்கை உலகெங்கும் முடுக்கி விடப்பட்டது. இம்முயற்சிக்கு பிறகு உலக அளவில் போலியாவின் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்தது, இருப்பினும் இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தனித்துவமான செயல்பாடுகள் தேவைப்பட்டன. எனவே, 1995-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் உதவியோடு Pulse Polio Immunization எனப்படும் ஒருங்கிணைந்த போலியோ தடுப்பு நடவடிக்கை நாடெங்கும் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆண்டுக்கு இருமுறை போலியோ தடுப்பு சொட்டு மருந்து, சிறப்பு முகாம்கள் அமைத்து வழங்கப்பட்டு வருகிறது. 

இதுவரை 24 லட்சம் சுகாதார பணியாளர்கள், 1.5 லட்சம் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் என பல லட்சம் மக்களின் பங்களிப்போடு ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளாக இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மலைபிரதேசங்கள், கிராமங்கள், ரயில், பேருந்து, விமான நிலையங்கள், பெரிய அலுவலகங்களிலிருந்து செங்கல் சூளை வரைக்குமான பலவகை பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டன. சாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பு மக்களையும் தடுப்பு மருந்து சென்றடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 
இத்தகைய முயற்சிகளின் பலனாக, கடந்த மூன்று ஆண்டுகளில் போலியோவின் தாக்கம் முற்றிலுமாக குறைந்திருக்கிறது. 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உலக சுகாதார அமைப்பானது போலியோ பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது. இந்திய நகரங்களில் சேகரிக்கப்பட்ட சில மாதிரிகளின் ஆய்வு முடிவுகளுக்குப் பின், போலியோ இல்லாத நாடு என்கிற அந்தஸ்து கிடைத்து விடும். 

இது சிறப்பான முன்னேற்றம், ஏன்?

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொது சுகாதாரத்திற்காக 1 சதவிகிதத்திற்கும் குறைவாக செலவிடும் தேசம், மக்கள் தொகை, அதிலும் குறிப்பாக சுகாதாரம் பற்றிய போதிய வழிப்புணர்வு இல்லாத கிராமப்புற மக்கள், போலியோ நுண்கிருமி தொற்றுக்கு ஏதுவானதாக அமைந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தான் போலியோ தடுப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறோம். கடந்த 19 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த மத்திய, மாநில அரசுகள், சேவைப் பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள், பணியாளர்கள், உலக சுகாதார அமைப்பு, தொழில்நுட்ப உதவியளித்த ஊடகங்கள் என அனைத்து தரப்பினரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் இந்த மாபெரும் முன்னேற்றம். 
ஒரு நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென்றால் ஆரோக்கியமான மனித வளம் மிகவும் அவசியம். அந்த வகையில் 2000-ம் ஆண்டில் இருந்து போலியோ தடுப்பு முகாம்களுக்காக ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஏனெனில் போலியோ போன்ற நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயானது மனித மாண்பை சிதைத்து, மனித வள ஆற்றலை முற்றிலுமாக முடக்கக் கூடியது. தடுக்கக்கூடிய நோயினால் ஒரு மனிதன் பாதிக்கப்படுகிறான் என்றால் அங்கே நலமாக வாழும் அடிப்படை மனித உரிமை மறுக்கப்படுகிறது என்று பொருள். போலியோ இல்லா இந்தியாவை உருவாக்கியிருக்கும் இந்த வேளையில், இம்முன்னேற்றத்தை எட்டுவதற்கு நாம் எடுத்துக் கொண்ட காலம் குறுகியதல்ல என்பதும், சுகாதாரத் துறையில் அடைய வேண்டிய முன்னேற்றங்கள் நம் முன் மிகப்பெரிய சவால்களாக நிறைந்திருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் இன்னும் போலியோவின் தாக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. எனவே அங்கிருந்து போலியோ கிருமிகள் ஊடுவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையும் அவசியமாகிறது. திட்டமிட்டு செயல்பட்டால் மிகப்பெரிய இலக்குகளையும் எட்டிவிடலாம் என்பதற்கு இந்தியாவில் போலியோ ஒழிப்பு ஒரு அருமையான எடுத்துக்காட்டு.

பயணங்கள் தொடரும்...

சவால்களையும், சாதனைகளையும் தேடி...

சிகரம் டைஜஸ்ட், பிப்ரவரி 2014

Friday, July 17, 2015

இஸ்ரோவின் சாதனை




GSLV-D5

2014-ஐ மிகவும் வெற்றிகரமானதாக துவக்கியிருக்கிறது நமது இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ. கடந்த (2014) ஜனவரி 5-ம் தேதி சுமார் இரண்டு டன் (1982 கிலோ) எடையுள்ள ஜிசாட் - 14 என்னும் தகவல்தொடர்பு செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி புவிவட்டப்பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தி சாதனை படைத்தது. 
GSAT-14

 இஸ்ரோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பி.எஸ்.எல்.வி (PSLV) மற்றும் ஜி.எஸ்.எல்.வி (GSLV) ஆகிய இரண்டு ராக்கெட்டுகளை மட்டுமே தற்போது பயன்படுத்தி வருகிறது. இதில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டால் குறைவான உயரத்தில் இரண்டு டன்னுக்கும் குறைவான செயற்கைக்கோள்களையே நிலைநிறுத்த முடியும். இதுவரை 30 தடவை விண்ணில் ஏவப்பட்டு 29 முறை வெற்றி கண்டிருக்கிறது. இஸ்ரோவின் வெற்றிகரமான ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி திகழ்கிறது. ஆனால் இந்தியாவின் வருங்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு பி.எஸ்.எல்.வி மட்டும் போதுமானதல்ல.
இந்தியா சிறிய செயற்கைக்கோள்களை மட்டுமல்லாது எடைமிக்க செயற்கைகோள்களையும் தயாரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் எடை மிக்கதாகவும், அதிக உயரத்தில் (பூமியிலிருந்து சுமார் 35 ஆயிரம் கி.மீ.) நிலை நிறுத்தப்பட வேண்டியவை. கடந்த 2013-ஆம் ஆண்டில் இஸ்ரோ செலுத்திய இன்சாட்-3ஈ மற்றும் ஜிசாட்-7 என்ற இரண்டு செயற்கைக்கோள்களும் 2 டன்னுக்கும் அதிகமான எடை கொண்டவை. எனவே, இவ்விரு செயற்கைக்கோள்களும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரஞ்சு கயானாவின், கூரு ஏவுதளத்திலிருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இவ்வாறு செயற்கைக்கோள்கள் செலுத்தப்படும் போது அவற்றை கூருவுக்கு எடுத்துச் செல்லும் செலவு, உயரே செலுத்த நாம் அளிக்கும் கட்டணம் என செலவுகள் மிக அதிகமாக இருக்கும். வருங்காலத்தில் இத்தகைய செலவுகளை குறைக்கவும், விண்வெளி ஆய்வில் சுயச்சார்போடு செயலாற்றவும் இஸ்ரோவிற்கு சக்திமிக்க ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி தேவைப்படுகிறது. 

இதுவரை எட்டு முறை விண்ணில் ஏவப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி மூன்று முறை தோல்வியடைந்திருக்கிறது. அதிக எடைமிக்க செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பயன்படும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் கிரையோஜெனிக் (கடும் குளிர்விர்ப்பு நிலை) ராக்கெட் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை என்ஜின்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் பணம் கொடுத்து ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா 1990-ல் முயன்ற போது அமெரிக்கா குறுக்கிட்டு ரஷ்யாவிடமிருந்து இத்தொழில்நுட்பம் கிடைக்காதபடி தடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிப்பதிலும், சோதனை செய்வதிலும், ராக்கெட் இயக்கத்தின் போது அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் பல தொழில்நுட்ப சவால்கள் உள்ளன.

நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக பாடுபட்டு, பல கட்ட மேம்படுத்தல் மற்றும் சோதனை ஓட்டங்களுக்கு பிறகு கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கும் முயற்சியில் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார்கள். இதற்கு சான்றாக மேலே குறிப்பிடப்பட்ட சமீபத்திய சாதனையை சொல்லலாம். இந்த ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட்டில் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மகத்தான வெற்றியின் மூலம் சொந்தமாக கிரையோஜெனிக் என்ஜின்கள் தயாரித்த 6-வது நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகால உழைப்பின் வெற்றி என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில், வருங்காலங்களில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இதை விட சக்திமிக்க ராக்கெட்டுகள் தேவைப்படுகின்றன என்பதும், நான்கு முதல் ஐந்து டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு உதவும் ஜி.எஸ்.எல்.வி மார்க் III (GSLV Mk III) ரக ராக்கெட்டுகள் இன்னும் உருவாக்க முயற்சியில் தான் இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள். 

பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப தேவைகளுக்கும், பேரிடர் மேலாண்மை (Disaster Management), தொலையுணர்தல் (Remote Sensing), இடஞ்சுட்டல் (Navigation) போன்வற்றிற்கும் ஆற்றல்மிக்க செயற்கைகோள்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய தேவைகளை மனதில் கொண்டு மக்களின் பயன்பாட்டிற்கும், நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் உதவுகிற திட்டங்களை இஸ்ரோ தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. இந்திய பொருளாதார, தகவல் தொடர்பு மற்றும் மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டால் இஸ்ரோவின் நோக்கங்கள் நிறைவேறும் என நம்பலாம். 

சிகரம் டைஜஸ்ட், ஜனவரி 2014

Wednesday, February 25, 2015

எபோலாவுக்கு எதிரான போர்


எபோலா (Ebola) - கடந்த சில மாதங்களாக மேற்கு ஆப்ரிக்க கண்டத்தின் பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய். பொதுவாக எபோலா வைரஸ் நோய் (Ebola Virus Disease - EVD) என அறியப்படும் இது எபோலா என்னும் நுண்கிருமியால் உண்டாகிறது. ஆப்ரிக்க காடுகளில் காணப்படும் பழந்தின்னி வெளவால்களிடமிருந்து (Fruit bats) தான் இந்த நுண்கிருமி மனிதர்களுக்கு முதன்முதலாக பரவியிருக்கிறது. எபோலா நுண்கிருமியால் பாதிக்கப்பட்ட வெளவால்களை மனிதர்கள் உண்ணும் போதோ, அவற்றின் உடல்நீர் (Body fluids) மீதான நேரடி தொடர்பின் மூலமாகவோ பரவியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. வெளவால்கள் மட்டுமன்றி சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகள், நாய், பன்றி போன்ற விலங்குகள், எலி, அணில் போன்ற கொறிணிகள் (Rodents) ஆகியவையும் எபோலா நுண்கிருமியின் பாதிப்புக்கு எளிதாக ஆளாக நேரிடும். ஆனால் இதுவரை கொசு போன்ற பூச்சியினங்கள் மூலமாக எபோலா பரவும் என்பது நிரூபிக்கப்படவில்லை.


எபோலா - ஒரு மீள்பார்வை

    1976-ம் ஆண்டு முதன்முறையாக தெற்கு சூடானின் நசரா பகுதியில் ஒருவித மர்மக்காய்ச்சல் கண்டறியப்பட்டது. இக்காய்ச்சல் சூடான் நுண்கிருமியால் (Sudan Virus) ஏற்படுகிறது என்றும் அதற்கான மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தெற்கு சூடானில் சுமார் 151 பேர் இந்நோய்க்கு பலியாயினர். அதே ஆண்டில் சயர் (Zaire) நாட்டில் (இன்றைய காங்கோ) எபோலா தாக்குதல் கண்டறியப்பட்டது. காங்கோ நாட்டிலுள்ள எபோலா நதிக்கரையில் தோன்றி பரவியதால் எபோலா என்று பெயரிடப்பட்டது. மீண்டும் 1995-ம் ஆண்டு காங்கோவிலும், 2012-ம் ஆண்டு உகாண்டாவிலும் பரவி பல உயிர்களை பலி வாங்கிய எபோலா நுண்கிருமி நாளுக்கு நாள் பல மாறுதல்களுடன் மனிதர்களை அச்சுறுத்துவதாக சொல்லப்படுகிறது.

    இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் தொடங்கிய எபோலாவின் அச்சுறுத்தல் அதன் அண்டை நாடுகளான லைபீரியா, சியேரா லியோன், செனகல் ஆகியவற்றுக்கும் வேகமாக பரவியது. உலக சுகாதார மையத்தின் (World Health Organization - WHO) தரவுகளின்படி தற்போது பரவிக் கொண்டிருக்கும் எபோலாவின் தாக்கமே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளைத் தவிர ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஐவருக்கும் இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எபோலா - உயிர்கொல்லியா?

        உடல் நீரின் வழியே பரவும் எபோலா நுண்கிருமியால் பாதிக்கப்பட்டவருக்கு முதல் ஏழு முதல் ஒன்பது நாட்கள் வரை தலைவலி, தீராத காய்ச்சல் போன்றவை ஏற்படும். முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லையென்றால் பத்து முதல் பன்னிரண்டு நாட்களுக்குள் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழப்பதோடு உடலின் பல இடங்களில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்து விடும். பாதிக்கப்பட்டவரின் எச்சில், வியர்வை, இரத்தம் போன்றவற்றின் மீதான மற்றவர்களின் நேரடி தொடர்பால் எபோலா பரவுவதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தியே சிகிச்சையளிக்க முடியும். அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் சிகிச்சையளிப்பதும் சவாலானதாகவே கருதப்படுகிறது. இருப்பினும் பாதுகாப்பு உபகரணங்களின் (Personal Protective Equipment - PPE) உதவியோடும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் அர்ப்பண உணர்வாலும் எபோலா என்னும் உயிர்கொல்லிக்கு எதிரான போர் தொடர்கிறது.

எபோலாவிற்கு எதிரான போர்


சர்வதேச சமூகமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து எபோலாவுக்கு எதிரான ஒரு இயக்கத்தையே முன்னெடுத்திருக்கிறார்கள். உலக நாடுகள் பலவும் மருந்து பொருட்களையும், பாதுகாப்பு உபகரணங்களையும் எபோலாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்பிய வண்ணம் இருக்கின்றன. உலகில் மருத்துவச் சேவைக்கு புகழ்பெற்ற கியூபா தனது மருத்துவ பணியாளர்களை அனுப்பியிருக்கிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை பல மருத்துவ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. எபோலாவை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு நைஜீரியா. ஆப்ரிக்க கண்டத்தில் மிகப்பெரும் மக்கள் தொகையை கொண்ட நைஜீரியாவில் கடந்த ஜøலை மாதம் எபோலா பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. அன்று முதல் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டடன. ஏற்கனவே போலியோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்னனுபவம் எபோலா ஒழிப்பிலும் கைகொடுத்தது. உலக சுகாதார நிறுவனத்தின் உதவியோடு நைஜீரியாவின் அரசு சுகாதார மையங்கள் மக்களிடையே எபோலாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இம்முயற்சிகளின் பலனாக கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி எபோலா பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் இருந்து நைஜீரியாவை நீக்கியது உலக சுகாதார நிறுவனம்.

என்ன செய்கிறது இந்தியா ?

எபோலா நோய்க்கான எந்த முகாந்திரமும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இந்தியா தனது பரிசோதனை முயற்சிகளை தீவிரமாக செயல்படுத்தியிருக்கிறது. குறிப்பாக எபோலா பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து வரும் விமானப் பயணிகள் தகுந்த மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். எபோலா தடுப்பு நடவடிக்கையில் உதவுவதற்காக எல்லைகளற்ற மருத்துவர்கள் (Medecins Sans Frontieres - MSF) அமைப்பு மேற்கு ஆப்ரிக்காவில் தாங்கள் மேற்கொண்ட சிகிச்சை முறைகளைப் பற்றிய தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. ஏறக்குறைய 90% இறப்பு விகிதமுள்ள எபோலா, இந்தியா போன்ற நாடுகளில் பரவினால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தியா மிக எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியிருக்கிறது.

     சுகாதாரத்துறையில் தனியாரின் பங்கை ஊக்குவிக்கும் அரசு, இது போன்ற கொள்ளை நோய்களின் தாக்குதலின் போது தனது கடமைகளை மறந்து விடக்கூடாது. எபோலா மட்டுமின்றி காசநோய், தொழுநோய், கலா அசர் (Kala Azar) என்று சொல்லப்படுகின்ற கருங்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கான தடுப்பு முயற்சிகள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறங்களில் குறைந்து வரும் மருத்துவர், நோயாளிகளின் விகிதம் (Doctor to Patient ratio) சரியான அளவில் பேணப்பட வேண்டும். இந்தியாவின் கடைக்கோடியில் வாழும் கடைசி குடிமகனுக்கும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் சென்று சேர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது போன்ற தொடர் முயற்சிகளாலும், அரசின் நடவடிக்கைகளாலும் மட்டுமே சுகாதாரத்தில் தன்னிறைவு இந்தியாவில் சாத்தியப்படும்.

தடுப்பு மருந்துகள் ஏன் இல்லை?

    1976-ல் தோன்றி பரவிய ஒரு நோய்க்கு இன்னும் தடுப்பு மருந்து ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பலருக்கும் புரியாக புதிராகவே இருக்கிறது. இதுவரை கண்டறியப்பட்ட மருந்துகள் பலவும் விலங்குகளில் செலுத்தப்பட்டு சோதனை செய்யும் பரிசோதனை முயற்சியைத் தாண்டவில்லை. ஆனால் மேற்கு ஆப்ரிக்காவில் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எபோலாவிற்கு ஏன் இன்னும் தடுப்பு மருந்து இல்லை என்பதற்கான ஒரு சர்வதேச சமூக-பொருளாதாரக் காரணியை சுட்டிக்காட்டியிருக்கிறது. இதுவரை எபோலாவால் பாதிக்கப்பட்டவை அனைத்தும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழும் ஆப்ரிக்க நாடுகள் தான். இன்று மருந்து சார்ந்த ஆராய்ச்சிகள், மருந்து உற்பத்தி ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரு நிறுவனங்கள் எபோலா மருந்து ஆராய்ச்சியில் போதிய வேகம் காட்டவில்லை. அப்படி மருந்து கண்டறிப்பட்டால் அதனை இந்த ஏழை நாடுகளில் சந்தைப்படுத்தும் அவர்களது லாப நோக்கம் நிறைவேறாமல் போய் விடலாம் என்பது ஒரு முக்கிய காரணம். இன்று எபோலாவிற்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் பல வளர்ந்த நாடுகள் கூட பிற்காலத்தில் எபோலா நுண்கிருமி உயிரி ஆயுதமாக (Bio weapon) பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சத்திலேயே அவற்றை செயல்படுத்தியிருக்கிறார்கள்.

    உலக சுகாதார நிறுவனம் 2015-ம் ஆண்டின் துவக்கத்தில் எபோலாவிற்கான தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று நம்பிக்கையளித்திருக்கிறது. பயன்பாட்டுக்கு வந்தபின் தொண்டு நிறுவனங்கள், சுகாதார அமைப்புகள் ஆகியவற்றின் உதவியோடு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் மருந்துகள் சென்றடைய வேண்டும். இத்தருணத்தில் வேகமாக பரவும் ஒரு கொடிய நோய்க்கு எதிராக மேற்கு ஆப்ரிக்க கண்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பெரும் பாராட்டுக்குரியவர்களே. எனவே தான் டைம் பத்திரிகை எபோலா போராளிகளை (Ebola Fighters) 2014-ம் ஆண்டின் சிறந்த மனிதர்கள் என அறிவித்திருக்கிறது. உயிரை பணயம் வைத்து உயிர் காக்கும் பணியைச் செய்யும் இவர்களே உண்மையான மனிதநேயச் செம்மல்கள். இந்தியாவிலும் மருத்துவத்துறையில் பணியாற்றுகிறவர்களுக்கும், மருத்துவ துறையை தேர்வு செய்கிறவர்களுக்கும் இந்த போராட்ட உணர்வு வேண்டும்.

பயணங்கள் தொடரும்...சவால்களையும், சாதனைகளையும் தேடி.

சிகரம் டைஜஸ்ட், டிசம்பர் 2014