The Fall of a Sparrow by Salim Ali
நான் வாசித்து முடித்த இரண்டாவது சுயசரிதை புத்தகம் இது.
இந்தியாவின் புகழ்பெற்ற பறவையிலாளர் சலீம் அலி, இந்தியர்களின் வாழ்வும், சூழல்களும் வெகுவாக மாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் முற்றிலும் வித்தியாசமான ஒரு பணியை தேர்ந்தெடுத்தவர். தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுத முடிவெடுத்த போது தன்னிடம் நினைவுகள் மட்டுமே மிச்சமிருந்ததாக முன்னுரையில் சொல்லும் இந்த மனிதரின் வாழ்க்கை உண்மையிலேயே வெகு சுவாரஸ்யமானது.
நான் வாசித்து முடித்த இரண்டாவது சுயசரிதை புத்தகம் இது.
இந்தியாவின் புகழ்பெற்ற பறவையிலாளர் சலீம் அலி, இந்தியர்களின் வாழ்வும், சூழல்களும் வெகுவாக மாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் முற்றிலும் வித்தியாசமான ஒரு பணியை தேர்ந்தெடுத்தவர். தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுத முடிவெடுத்த போது தன்னிடம் நினைவுகள் மட்டுமே மிச்சமிருந்ததாக முன்னுரையில் சொல்லும் இந்த மனிதரின் வாழ்க்கை உண்மையிலேயே வெகு சுவாரஸ்யமானது.
பறவைகளை பொழுதுபோக்குக்காக வேட்டையாடி, வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சிறுவன், தான் சுட்டு வீழ்த்திய ஒரு குருவியினது தனித்தன்மையின் விடை தேடி புறப்படுகிறான். அந்த அறிவுத்தேடல் அவனை மேலும் பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையின் புதிர்களை கண்டறியும் செயலுக்கு எப்படி இட்டு செல்கிறது என்பதை அவனது குரலாகவே பதிவு செய்கிறது இந்த புத்தகம்.
வட இந்தியாவின் இமயமலைத் தொடர், கட்ச் பிரதேசம், மத்திய இந்தியாவின் பஸ்தர் பகுதி, தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், அண்டை நாடுகளான பர்மா, ஆப்கானிஸ்தான் என நீளும் சலீம் அலியின் ஆய்வு பயணங்களும் அதனூடே அவர் சேகரித்திருக்கும் இயற்கை குறித்த அறிவியல் தகவல்களும் தலைமுறைகள் தாண்டியும் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். அவரது ஆய்வுகளுக்கும், பயணங்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அளித்த ஒத்துழைப்பும், ஆதரவும் மிகவும் முக்கியமானது. அவரை கௌரவித்த விருதுகளும், அவர் ஆவணப்படுத்திய புத்தகங்களும், சில புகைப்படங்களும் பட்டியலிடப்பட்டு சுயசரிதையோடு இணைக்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவேர்சிட்டி பிரஸ் பதிப்பகத்தார் எழுத்துருவை மாற்றி வெளியிட்டால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.
இந்த புத்தகம் முழுக்க சலீம் அலி சந்தித்த பல மனிதர்கள் வந்து போகிறார்கள் குறிப்பாக ஆங்கிலேய அதிகாரிகளும், உயிரியல் விஞ்ஞானிகளும். சிலருடன் பல தருணங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றிய போதிலும், வனஉயிரின பாதுகாப்பு சார்ந்து ஒத்த கருத்து உள்ளவர்களுடன் இணைந்து பணி செய்கிறார், அவர்களிடமிருந்து பல அறிவியல் நுணுக்கங்களை கற்றுக் கொள்கிறார்.
வன உயிரின பாதுகாப்பை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும் எனக் குறிப்பிட்டு கூறும் சலீம் அலி, அதனை அகிம்சை என்ற பெயரில் உணர்ச்சிகரமானதாக மாற்றி அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தருவதில் தனக்கு உடன்பாடில்லை என்கிறார்.
பறவை நோக்குதல் என்பது இயந்திரமயமான நவீன உலகின் அழுத்தும் யதார்த்தங்களிலிருந்து விடுபட்டு, அடர்ந்த கானகங்களில் தன் சுயத்தை தேடும் ஒரு முயற்சி தான் என்கிறார்.
வாழ்வில் ஒருமுறையேனும் கூண்டுகளுக்கு வெளியே பறந்து திரியும் பறவைகளை சற்றேனும் உற்று நோக்கியிருந்தால் நீங்களும் இதனை உணர்ந்திருக்கக் கூடும்.