உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Friday, December 21, 2018

பறவை மனிதரின் பயணங்கள்

The Fall of a Sparrow by Salim Ali

நான் வாசித்து முடித்த இரண்டாவது சுயசரிதை புத்தகம் இது.

இந்தியாவின் புகழ்பெற்ற பறவையிலாளர் சலீம் அலி, இந்தியர்களின் வாழ்வும், சூழல்களும் வெகுவாக மாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் முற்றிலும் வித்தியாசமான ஒரு பணியை தேர்ந்தெடுத்தவர். தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுத முடிவெடுத்த போது தன்னிடம் நினைவுகள் மட்டுமே மிச்சமிருந்ததாக முன்னுரையில் சொல்லும் இந்த மனிதரின் வாழ்க்கை உண்மையிலேயே வெகு சுவாரஸ்யமானது.


பறவைகளை பொழுதுபோக்குக்காக வேட்டையாடி, வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சிறுவன், தான் சுட்டு வீழ்த்திய ஒரு குருவியினது தனித்தன்மையின் விடை தேடி புறப்படுகிறான். அந்த அறிவுத்தேடல் அவனை மேலும் பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையின் புதிர்களை கண்டறியும் செயலுக்கு எப்படி இட்டு செல்கிறது என்பதை அவனது குரலாகவே பதிவு செய்கிறது இந்த புத்தகம்.

வட இந்தியாவின் இமயமலைத் தொடர், கட்ச் பிரதேசம், மத்திய இந்தியாவின் பஸ்தர் பகுதி, தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், அண்டை நாடுகளான பர்மா, ஆப்கானிஸ்தான் என நீளும் சலீம் அலியின் ஆய்வு பயணங்களும் அதனூடே அவர் சேகரித்திருக்கும் இயற்கை குறித்த அறிவியல் தகவல்களும் தலைமுறைகள் தாண்டியும் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். அவரது ஆய்வுகளுக்கும், பயணங்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அளித்த ஒத்துழைப்பும், ஆதரவும் மிகவும் முக்கியமானது. அவரை கௌரவித்த விருதுகளும், அவர் ஆவணப்படுத்திய புத்தகங்களும், சில புகைப்படங்களும் பட்டியலிடப்பட்டு சுயசரிதையோடு இணைக்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவேர்சிட்டி பிரஸ் பதிப்பகத்தார் எழுத்துருவை மாற்றி வெளியிட்டால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.   

இந்த புத்தகம் முழுக்க சலீம் அலி சந்தித்த பல மனிதர்கள் வந்து போகிறார்கள் குறிப்பாக ஆங்கிலேய அதிகாரிகளும், உயிரியல் விஞ்ஞானிகளும். சிலருடன் பல தருணங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றிய போதிலும், வனஉயிரின பாதுகாப்பு சார்ந்து ஒத்த கருத்து உள்ளவர்களுடன் இணைந்து பணி செய்கிறார், அவர்களிடமிருந்து பல அறிவியல் நுணுக்கங்களை கற்றுக் கொள்கிறார். 

வன உயிரின பாதுகாப்பை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும் எனக் குறிப்பிட்டு கூறும் சலீம் அலி, அதனை அகிம்சை என்ற பெயரில் உணர்ச்சிகரமானதாக மாற்றி அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தருவதில் தனக்கு உடன்பாடில்லை என்கிறார். 

பறவை நோக்குதல் என்பது இயந்திரமயமான நவீன உலகின் அழுத்தும் யதார்த்தங்களிலிருந்து விடுபட்டு, அடர்ந்த கானகங்களில் தன் சுயத்தை தேடும் ஒரு முயற்சி தான் என்கிறார். 
 வாழ்வில் ஒருமுறையேனும் கூண்டுகளுக்கு வெளியே பறந்து திரியும் பறவைகளை சற்றேனும் உற்று நோக்கியிருந்தால் நீங்களும் இதனை உணர்ந்திருக்கக் கூடும்.

Saturday, December 1, 2018

வாசிப்போம் #5

Homo Deus: A Brief History of Tomorrow  

Sapiens: A Brief History of Humankind எழுதிய யுவால் நோவா ஹராரியின் அடுத்த புத்தகம் இது. தனது சாப்பின்ஸ் நூலில் மனிதகுலம் கடந்து வந்த வரலாற்றின் பக்கங்களை அறிவியல் பார்வையோடு பதிவு செய்தவர், இந்த புத்தகத்தில் மனிதகுலத்தின் எதிர்காலம் பற்றிய தனது பார்வையை முன்வைக்கிறார்.

நமது நம்பிக்கைகள், மரபுகள், பண்பாடுகள், வாழ்க்கைமுறைகள் எதுவாக இருந்தாலும் திறந்த மனதுடன், நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த உலகம் குறித்த கற்பிதங்களை கேள்விக்குட்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளோடு துவங்குகிறது இந்த புத்தகம். 


கடந்த சில நூற்றாண்டுகளில் இருந்ததை விடவும் போர்கள், பெரும்பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் போன்றவற்றின் தாக்கம் நமது சமகாலத்தில் பெருமளவு குறைந்திருப்பதை குறிப்பிட்டுக் காட்டி, இத்தகைய மாற்றத்திற்கு மனித செயல்பாடுகளும், அறிவியல் ஆய்வுகளும் முக்கியமான காரணம் என நிறுவுகிறார்.

வளர்ச்சி நோக்கிய மனிதகுலத்தின் பயணத்தில் அடுத்தடுத்த இலக்குகளாக இறவாத்தன்மை(Immortality), பேரின்ப நிலை (Bliss) மற்றும் தெய்வீகத்தன்மை (Divinity)ஆகியவற்றை அடைதல் போன்றவை இருக்கும் என்கிறார். எதிர்காலத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக சூழலியல் பிரச்சனைகளை முன் வைக்கிறார். 

மற்ற எல்லா உயிரினங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தி இந்த உலகை தமக்கு ஏற்ற முறையில் மனிதர்கள் மாற்றியமைத்தற்கு முக்கிய காரணம் பெருமளவில் ஒருங்கிணைந்து செயலாற்றியதால் தான் என்கிறார்.

ஆன்மா, மனித மனம் போன்ற கருத்தாக்கங்கள் வெறும் புனைவுகள் தான் என்று கூறும் ஹராரி, மனித உணர்வுகள், மூளையில் இருக்கும் லட்சக்கணக்கான நியூரான்களிடையே நடக்கும் மின்வேதியியல் வினைகளின் வெளிப்பாடு தான் என்கிறார். தொழில்நுட்பங்களின் துணைகொண்டு இத்தகைய வினைகளை மாற்றி அமைப்பதன் மூலம் மனிதன் நிலையான பேரின்ப நிலையை அடைய முயற்சிப்பான் என்பதும், இத்தகைய அதீத தொழில்நுட்ப வளர்ச்சி வெகு சில பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்.

இந்த பிரபஞ்சத்தில் படைப்பின் அதிஉன்னதம்  மனிதன் இல்லை என்பதும், மனிதம், மனித நலன் போன்றவை காலப்போக்கில் மறைந்து, நாம் உருவாக்கும் தரவுகள் (Data), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திர கற்றல் (Machine Learning) போன்ற தொழில்நுட்பங்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்.

பண்டைய வரலாற்றுக் காலங்களில் தோன்றிய மதங்களிலும், மத நூல்களிலும் தரவுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தற்போதைய நவீன உலகத்திற்கான வழிகாட்டுதல்களை மனிதர்கள் கண்டடைய முடியாது எனக் கூறும் ஹராரி, இன்னும் சில பத்தாண்டுகளில் புதிய, நவீன தொழில்நுட்ப மதங்கள் உருவாக வாய்ப்பிருப்பதாக ஆருடம் கூறுகிறார்.

தனது கருத்தாக்கங்களை தீர்க்கதரிசனமாகவோ, அறிவியல் புனைவாகவோ முன்வைக்காமல் அறிவியல் ஆய்வு முடிவுகளின் துணை கொண்டு கணிப்புகளாக மட்டுமே தொகுத்து தந்திருக்கிறார். ஒரு வரலாற்றாசிரியர் அறிவியலை, மிக சுவாரஸ்யமாக, எந்த இடத்திலும் வாசகனை தேங்க விடாமல், தனது எழுத்தாற்றலால் 462 பக்கங்களையும் தொடர்ச்சியாக வாசித்து விடும்படி எழுதியிருக்கிறார்.

வாழ்க்கையில் நாம் வாசிக்கும் ஒரு சில புத்தகங்களே நாம் இதுவரை கொண்டிருக்கும் பல நம்பிக்கைகளை தலைகீழாக புரட்டிப் போட்டு கேள்விக்குட்படுத்தும் திறன் வாய்ந்தவை. Homo Deus: A Brief History of Tomorrow  அந்த வகையை சார்ந்தது. 

நீங்கள் இந்த புத்தகத்தில் ஹராரி கூறியிருக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது முரண்பட்டு கேள்விகள் எழுப்பலாம். கேள்விகளை கேட்பதும், விடைகளை தேடுவதும், மாற்றங்களை ஏற்பதும் தானே அறிவியலாக முடியும். 


 

Friday, November 16, 2018

ஒரு பியானோ கலைஞனின் கதை

The Pianist (2002 film)

இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் போலந்து நாட்டின் புகழ்பெற்ற பியானோ இசைக்கலைஞனான Szpilman னின் வாழ்க்கையை, போரின் கொடுந்துயரத்தினூடே வாழ்ந்திருத்தலுக்கான போராட்டத்தை, நம் கண்முன்னே விவரிக்கிறது திரைக்கதை.

நாஜிப்படைகள் நடத்திய இனப்படுகொலைகளின் சாட்சியமாக விளங்கும் இன்னொரு கலைப்படைப்பு இந்த திரைப்படம். அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் மனித மனதின் ஓரங்களில் படிந்திருக்கும் மனிதம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.



தன்னைச் சுற்றிலும் போரின் இனந்தெரியாத துயரங்கள் நிரம்பியிருக்க, தற்காலிக தீர்வாக உயிருக்கு பாதுகாப்பான ஓர் உறைவிடம் கிடைக்கிறது, தன் கண்முன்னே தான் உயிரென நேசிக்கும் பியானோ இருக்கிறது, உரத்த சத்தம் எழுப்பினால் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்கிற நிலையில் பியானோ விசைகளின் மீது தன் விரல்கள் படாமல்  ஒரு கலைஞனாக, Szpilman  னாக நடித்திருக்கும் Adrian Brody இசையை உணரும் அந்த தருணம், அந்த காட்சி, சினிமாவின் பேரழகியல்.

இறுதியாக அந்த ஜெர்மானிய ராணுவ கேப்டனுக்கும், Szpilman க்கும் இடையிலான சந்திப்பும், நட்பும், நாமெல்லாம் கலைகளினூடே மானுட நலம் தேடும் மனிதர்கள் தான் என்று சொல்லி விட்டு போகிறது.

கேட்குமா மனிதர்களுக்கு?

பி.கு.: 2002ம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விருது, 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள், BAFTA விருதுகள் என பல்வேறு விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது. BBC யின் 21ம் நூற்றாண்டின் சிறந்த நூறு திரைப்படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறது.

Saturday, October 20, 2018

வாசிப்போம் #4

India After Gandhi by Ramachandra Guha

பல நூறு ஆண்டுகளாக சாதி, மத, இன மோதல்களால் துண்டாடப்பட்டு, காலனியாதிக்க சக்திகளால் சுரண்டப்பட்டு கிடந்த ஒரு பெரும் நிலப்பரப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்ததன் சுருக்கமான வரலாறு இது. இந்த வரலாற்றின் பக்கங்களில் ஏன் நாம் இந்தியாவை, அதன் பன்முகத்தன்மையை கொண்டாட வேண்டும் என்பதற்கான விடை இருக்கிறது. ராமசந்திர குஹா வாசகனின் கைபிடித்து சகபயணியாக கூடவே பயணிக்கிறார்.

 இறுதியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதன் அடிப்படைக் கூறுகளை இழக்காத வரை, நியாயமான முறையில் தேர்தல்கள் நடக்கும் வரை, மதச்சார்பின்மை அரசின் கொள்கையாக இருக்கும் வரை, மிக முக்கியமாக, இந்திய மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை பேசவும், எழுதவும் பயன்படுத்தும் வரை, இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நிலைபெற்றிருக்கும் என்கிறார்.

இந்திய பன்முகத்தன்மைக்கு சவால்கள் எழுகின்ற இத்தகைய தருணங்களில் நாம் வாசிக்கவும், அடுத்த தலைமுறைக்கு இந்த தேசத்தின் சிறப்புகளை எடுத்துச் செல்லவும் கருவியாக பயன்படும் மிக முக்கியமான வரலாற்று ஆவணம் இந்த புத்தகம்.

வாசிப்போம் #3


Man's Search for Meaning by Viktor Frankl

சிறிய புத்தகம் தான், ஆனால் வாசித்து முடிக்கும் போது நிறைய நம்பிக்கையையும், வாழ்வில் தேடலுக்கான உத்வேகத்தையும் தந்து விட்டுப் போகிறது.
 //வாழ்வதற்காக ஒரு வலிமையான நோக்கத்தை உருவாக்கி வைத்திருப்பவர்கள், தங்கள் இருப்புக்கு எவ்வளவு ஆபத்து வந்தாலும் அந்த ஆபத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள் என்று நிறுவுகிறது இந்நூல்.//


 https://tamil.thehindu.com/society/spirituality/article24873011.ece/amp/?fbclid=IwAR2vGtkHTw2k4H4OeitS8Fqm6DQG1w7aXSBZFyYkviHW16kvvdSxWWq0Is0

Saturday, August 25, 2018

வாசிப்போம் #2

 What Can I Give?: Life lessons from My Teacher - Dr A.P.J. Abdul Kalam by Srijan Pal Singh

டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாமுடனான தனது அனுபவங்களை சிறுசிறு நிகழ்வுகளின் தொகுப்பாக எழுதியிருக்கிறார் ஸ்ரீஜன் பால் சிங். 2009 முதல் கலாமின் இறுதி நிமிடங்கள் வரை அவரது மாணவராகவும், உடன் பணியாளராகவும் இருந்தவர் இந்த ஸ்ரீஜன் பால் சிங். தனது வாழ்வின் இறுதி நிமிடங்கள் வரை அறிவுத் தேடலுடன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு, தனது உரைகளின் வழியே புதிய சிந்தனைகளையும், கனவுகளையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அஞ்சலியாக இந்த புத்தகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

வாசித்து முடிக்கும் போது கலாமின் கனவுகளையும், இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு நாம் என்ன பங்களிக்க போகிறோம் என்ற கேள்வியையும் நமக்குள் விதைத்து விட்டு போகிறது இந்த புத்தகம்.
ஒரு நல்ல படைப்பின் நோக்கமும் அது தானே !

Buy at amazon

Friday, July 20, 2018

சிகப்பு பூ மலர்ந்தது


2016ல் வெளியான ஜங்கிள் புக் திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும், கதையின் நாயகனான சிறுவன் மொக்ளியை குரங்கு கூட்டங்கள் கடத்திச் சென்று அதன் தலைவனாக இருக்கும் கிங் லூயியிடம் கொண்டு சேர்க்கும். தலைவனாக இருக்கும் கிங் லூயி, சிறுவனிடம், மனிதர்கள் பயன்படுத்தும் சிகப்பு பூவை (நெருப்பு) எனக்கு நீ உருவாக்கி தர வேண்டும், அதன் ரகசியத்தை அறிந்து விட்டால் மனிதர்களை போலவே நாங்களும் மாறிவிடுவோம் என்று சொல்லும். ஒரு பேன்டஸி திரைப்படத்தின் காட்சிதான் என்றாலும் மனிதர்களுக்கும் நெருப்பிற்குமான தொடர்பினை வெகு நேர்த்தியாக நமக்குள் செலுத்தி விட்டு போகும் காட்சி இது. நெருப்பை உருவாக்கி, அதனை கட்டுப்படுத்தி, பயன்படுத்தப் பயின்ற மனிதர்கள் அடைந்த பலன்கள் என்ன ? வாருங்கள் பார்க்கலாம்.


சாப்பியன்ஸ் உணவுச்சங்கிலியின் உச்சத்திற்கு வெகு வேகமாக முன்னேறியதற்கு முக்கிய காரணம் அவர்கள் நெருப்பை அன்றாடம் பயன்படுத்த தொடங்கியது தான். சுமார் எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் நெருப்பை அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஹோமோ எரக்டஸ், நியண்டர்தல்கள் மற்றும் சாப்பியன்ஸ்களின் மூதாதயர்கள் நெருப்பை அன்றாடம் பயன்படுத்தும் முறையை பழகினார்கள்.

நெருப்பானது இருட்டில் வெளிச்சத்தையும், கடுங்குளிரில் வெப்பத்தையும், மற்ற வேட்டை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பையும் மனிதர்களுக்கு அளித்தது. கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பைக் கொண்டு வெப்பமண்டல புதர் காடுகளில் எளிமையாக வேட்டையாடி உண்ணத் தொடங்கினார்கள்.

சமையல்...சமையல்...

நெருப்பைப் பயன்படுத்தி சமைக்கக் கற்றுக்கொண்ட பின் கோதுமை, அரிசி, உருளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டார்கள். நெருப்பு, உணவின் வேதித்தன்மையையும், உயிரித்தன்மையையும் வெகுவாக மாற்றியமைத்தது. மிக முக்கியமாக உணவுப் பொருட்களில் இருக்கும் நோய் பரப்பும் கிருமிகளை அழிக்க நெருப்பு வெகுவாக உதவியது.

உணவை வாயிலிட்டு மென்று, விழுங்கி அது செரிமானமாகும் ஒட்டுமொத்த முறையும் இப்போது மனிதர்களுக்கு எளிதாகிப் போனது. நெருப்பினால் சமைத்தல் சாத்தியமாகிய பின் மனிதர்கள் பல வகையான உணவுப் பொருட்களை உட்கொள்ள தொடங்கினார்கள். உணவருந்துவதற்கு அவர்கள் செலவிட்ட நேரமும், பற்களின் அளவும், ஜீரண உறுப்புகளின் அளவும் குறைய தொடங்கியது.
ஜீரண உறுப்புகளின் அளவு குறைய தொடங்கியதும், மூளையின் அளவு பெரியதாக தொடங்கியதும் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நீளமான குடல்களும், அளவில் பெரிய மூளையும் உடலின் ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பவை, எனவே இரண்டையும் ஒரு சேர ஒரே உடலில் கொண்டிருப்பது என்பது ஒரு உயிரிக்கு இயலாத காரியம். ஜீரண உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் பயன்பாடு குறைந்து மூளையின் அளவு பெரிதானதில் சமைத்தல் பெரும் பங்காற்றியது.

மனிதர்களுக்கும், மற்ற பலமிக்க வேட்டை விலங்குகளுக்குமிடையே ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது நெருப்பு தான். பெரும்பாலான வேட்டை விலங்குகளுக்கு அதன் வலுவான உடல் கட்டமைப்பு தான் மிகப்பெரிய  பலம். ஆனால் வேறு எந்த விலங்கும் நெருப்பு போன்றதொரு இயற்கையின் ஆற்றலை கட்டுப்படுத்தி தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவில்லை. உதாரணமாக கழுகுகளால் காற்றிலுள்ள வெப்ப அலைவரிசைகளை அடையாளம் கண்டு அதற்கேற்றவாறு வெப்பக்காற்று மேலேழும் போது, சிறகடித்து உயரே எழுப்ப முடியும். ஆனால் அவைகளால் காற்றில் வெப்ப அலைவரிசைகளை உருவாக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. கழுகுகளை போலன்றி மனிதர்களால் தேவைக்கு ஏற்றவாறு நெருப்பை உருவாக்கி பயன்படுத்த முடியும். ஒற்றை மனிதன் உருவாக்கும் ஒரு சிறு தீப்பொறி ஒட்டுமொத்த காட்டையும் தீக்கிரையாக்கி விடக்கூடும். நெருப்பின் கண்டறிதல் வருங்கால மனிதகுல ஆதிக்கத்தின் தொடக்கப்புள்ளி.

மனிதர்கள் இடம்பெயர்ந்த கதை..... அடுத்த பதிவில் 


Credits: Sapiens - A brief history of humankind by Yuval Noah Harari

Thursday, July 5, 2018

மூளைக்குள்ளே இருந்தது அறிவு !

ஹோமோ பேரினத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் ஒரே மாதிரியான குணாம்சங்களைக் கொண்டிருக்கவில்லை   என்பதைப் பார்த்தோம். ஆனால் பொதுவாகவே மனித இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் அளவில் பெரிய மூளையை கொண்டிருந்தன. சராசரியாக அறுபது கிலோ எடையுள்ள ஒரு பாலூட்டியின் மூளையினுடைய அளவு 200 கன சென்டிமீட்டர்கள். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மூளையினுடைய அளவு 600 கன சென்டிமீட்டர்கள்.


நமது மூளையின் சராசரி அளவு 1200 முதல் 1400 கன சென்டிமீட்டர்கள், மூளையின் அளவு மட்டுமே மனிதர்களின் சிந்திக்கும் திறனை முடிவு செய்யவில்லை. உண்மை என்னவெனில் அளவில் பெரிய மூளை உடலின் ஆற்றல் பயன்பாட்டை அதிகரித்தது. நமது மூளை உடல் எடையில் 2-3 சதவிகிதம் மட்டுமே பங்கு வகித்தாலும், ஓய்வில் இருக்கும் போதும் ஏறக்குறைய 25 சதவிகிதம் ஆற்றலை பயன்படுத்துகிறது. மற்ற உயிரினங்களான குரங்குகளின் மூளையானது ஓய்வு நேரங்களில் வெறும் 8 சதவிகிதம் ஆற்றலையே பயன்படுத்துகிறது.
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் தங்கள் மூளைக்கு தேவையான ஆற்றலைப் பெற இரண்டு மிக முக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒன்று, அவர்கள் அதிக நேரம் உணவு சேகரிக்க வேண்டியிருந்தது. இரண்டு, அவர்களுடைய வலிமையான தசைகளின் பயன்பாடு வெகுவாக குறைந்தது. உடலில் உற்பத்தியான ஆற்றல் சிந்திக்கவும், சிந்தனைகளை ஒருங்கிணைத்து பல சிக்கல்களுக்கு தீர்வு காணவும் பயன்பட  தொடங்கியது.

இன்று நமது சிந்தனைகள் தான் விமானங்களையும், துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் கண்டறிந்திருக்கின்றன. இத்தகைய கண்டுபிடிப்புகளைக் கொண்டு நம்மால் மற்ற உயிரினங்களின் மீது ஆதிக்கம் செலுத்த முடிகிறது. இந்த மாற்றம் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு, உண்மையில் இத்தகைய மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதற்கு அறுதியிட்டு சொல்வதற்கான பதில்கள் நம்மிடமில்லை.

சாப்பியன்ஸ் இன்றும் நிலைத்திருக்க இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் இரண்டு கால்களில் நடக்க துவங்கிய நிகழ்வு. நிமிர்ந்து நிற்க துவங்கிய பிறகு சாப்பியன்ஸ்களால் புல்வெளிகளில் நீண்ட தூரத்திற்கு பார்வையை செலுத்த முடிந்தது. நடமாட்டத்திற்கு பயன்பட்ட முன்னங்கால்கள் இப்போது கல் எறியவும், சக மனிதர்களுக்கு சமிஞ்ஞைகள் செய்யவும் பயன்பட்டன.
சாப்பியன்ஸ் நிமிர்ந்து நடக்கத் தொடங்கியதால் சில எதிர்மறையான விளைவுகளையும் அவர்கள் சந்திக்க நேர்ந்தது. நிமிர்ந்த நிலையில் முதுகெலும்பானது அதிக எடையுள்ள மண்டை ஓட்டை தாங்க வேண்டியிருந்தது. இத்தகைய மாற்றம் அவர்களது முதுகு, தண்டுவடம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தியது. இந்த எதிர்மறை விளைவுகள் பெண்களை இன்னும் மோசமாக பாதித்தது.நிமிர்ந்த நிலையில் பெண்களின் இடுப்பு பகுதி குறுகலாகி குழந்தைப் பிறப்பை கடினமாக்கியது. இப்பிரச்சனைக்கு தீர்வாக தான் சாப்பியன்ஸ் குழந்தைகளின்  பிறப்பு சில மாதங்கள் முன்னதாக நிகழத் தொடங்கியது. இன்றும் கூட மற்ற எல்லா உயிரினங்களை விடவும் மனிதக் குழந்தைகளுக்குத் தான் நீண்ட கால கவனிப்பும், பராமரிப்பும் தேவைப்படுகிறது. தனி நபராக ஒரு தாய் குழந்தைகளை பராமரிக்க கடினமாக இருந்ததால் சாப்பியன்ஸ்களிடையே சமூக அமைப்பு மற்றும் இன குழுக்கள் உருவானது. இன்று மனிதர்களிடையே இருக்கும் சமூகப் பிணைப்பிற்கு பரிணாம வளர்ச்சியே வித்திட்டது.
சாப்பியன்ஸ் குழந்தைகள் பிறக்கும் போது உலையிலிருந்து வெளிவரும் இரும்பு குழம்பு போலவே வெளிவருகிறார்கள், எனவே தான் அவர்களை நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு சிந்தனைகளை செலுத்தி இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, இஸ்லாமியனாகவோ, சமதர்மவாதியாகவோ வடிவமைத்துக் கொள்ள முடிகிறது.

அளவில் பெரிய மூளை, கல் ஆயுதங்களின் பயன்பாடு, சிந்தனைத் திறன் போன்ற திறன்கள் இருந்தும் சாப்பியன்ஸ் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக உணவுச் சங்கிலியின் உயரத்தில் இருந்த வலிமையான வேட்டையாடிகளான புலி, சுறா போன்ற உயிரினங்களுக்கு பயந்தே தான் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, நிலப்பகுதியில் பெரிய வேட்டையாடி உயிரினங்கள் மிச்சம் வைத்த எலும்புகளின் மஜ்ஜையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறார்கள்.

கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளாக தான் மனிதர்கள் தங்களை தலைச்சிறந்த வேட்டையாடிகளாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிங்கம், புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் வெகு மெதுவாகவே உணவுச் சங்கிலியின் உச்சியை நோக்கி நகர்ந்தன, இதனால் இயற்கை அதற்கெற்றவாறு சில தகவமைப்புகளை செய்ய முடிந்தது. குறிப்பாக சிங்கங்கள் வலுவான வேட்டையாடிகளாக பரிணமித்த அதே நேரம் மான்கள் வேகமாக ஓடும் திறனை பெற்றிருந்தன. ஆனால் மனிதர்களின் வேகமான வளர்ச்சிக்கு ஏற்றவாறு இயற்கை தன்னை நேர்படுத்திக் கொள்ள இயலவில்லை. பல லட்சம் ஆண்டுகளாக வலுவான உயிரினங்களைக் கண்டு அஞ்சி வாழ்ந்த மனித இனத்தின் பயமும் இயலாமையும் தான் இன்று நாம் காணும் போர்களுக்கும் சூழலியல் பிரச்சனைகளுக்கும் அடிப்படை என்று எண்ணத் தோன்றுகிறது.

நெருப்பு பிறந்தது.....

அடுத்த பதிவில்...

Credits: Sapiens - A brief history of humankind by Yuval Noah Harari    Buy at Amazon





Thursday, June 28, 2018

மனித குலத்தின் தொடக்கம்

கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக நமது ஹோமோ சாப்பியன்ஸ் பிரிவைச் சேர்ந்த மனித இனம் மட்டும் தான் இந்த பூமியில் வாழ்ந்து, ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. ஹோமோ என்பது பேரினத்தைக் (Genus) குறிக்கும் சொல், சாப்பியன்ஸ் என்பது இனத்தைக் (Species) குறிக்கும் சொல். ஹோமோ பேரினத்தைச் சார்ந்த பல்வேறு உயிரினங்கள் பரிணமித்து இவ்வுலகில் வாழ்ந்து, புதைப்படிமங்களாகி போனதன் வரலாறு இது. அத்தகைய உயிரினங்களைக் குறிக்க மனிதர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். நவீன மனிதர்களான நம்மைக் குறிப்பிட சாப்பியன்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்.

மனிதர்கள் எங்கே, எப்படி தோன்றினார்கள்? 

இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் Australopithecus பேரினத்தைச் சார்ந்த குரங்குகளிலிருந்து பரிணமித்து முதன்முதலில் மனிதர்கள் தோன்றினார்கள். அங்கிருந்து வடக்கு ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள்.

மாறுபட்ட குணநலங்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்கள் இப்புவியில் வாழ்ந்தனவா?

ஐரோப்பா மற்றும் மேற்காசிய பகுதிகளில் வாழ்ந்த மனித இனத்தை நியன்டர்தல்கள் (Neanderthals) என்கிறோம். இந்த நியன்டர்தல்கள் சாப்பியன்சை விட உருவில் பெரியவர்களாகவும், மேற்கு யூரேசிய பகுதியின் கடுங்குளிருக்கு தகவமைத்துக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஆசியாவின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்களை ஹோமோ எரக்டஸ் (Homo erectus) என்கிறோம். இந்த இனத்தைச் சார்ந்த உயிரினங்கள் ஏறக்குறைய இரண்டு மில்லியன் ஆண்டுகள் இவ்வுலகில் நிலைபெற்று வாழ்ந்திருக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜாவா தீவுப் பகுதியில் வாழ்ந்த உயிரினங்கள் Homo soloensis எனப்பட்டன, இவை வெப்பமண்டல பிரதேசத்தின் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு வாழ்ந்தன. மற்றுமொரு இந்தோனேசிய தீவான புளோரெஸில் வாழ்ந்த மனிதர்கள் குள்ளத்தன்மை உடையவர்களாக இருந்தனர். கடலில் நீர்மட்டம் குறைவாக இருந்த போது இத்தீவிற்கு இடம் பெயர்ந்த இவர்கள் கடல் மட்டம் உயர்ந்தவுடன் வளங்கள் குறைந்த தீவிற்குள் மாட்டிக் கொண்டனர். காலப்போக்கில் அதிக உணவு தேவைப்படும் உருவில் பெரிய உயிரிகள் அழியவே உருவத்தில் சிறியவர்கள் பிழைத்து வாழத் தொடங்கினர். உயரம், ஒரு மீட்டருக்கு மிகாமலும், எடை, இருபத்தி ஐந்து கிலோவிற்கு மிகாமலும் இருந்த இந்த மனிதர்களை Homo floresiensis  என்று வகைப்படுத்துகிறார்கள் அறிவியலாளர்கள்.
2010ம் ஆண்டு செர்பியாவின் டெனிசோவா குகையில் கண்டெடுக்கப்பட்ட விரல் எலும்பின் புதைப்படிமமானது இன்னொரு மனித இனமான Homo denisova  வினுடையது என்று கண்டறியப்பட்டது. இன்னும் ஏதேனும் குகைகளில், தீவுகளில் அல்லது பெருங்கடல்களின் ஆழங்களில் இது போன்ற புதைபடிமங்கள் கண்டறியப்படுவதற்கு காத்திருக்கலாம்.

ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மனித இனங்கள் பரிணமித்துக் கொண்டிருந்த நேரம், மனித இனத்தின் பிறப்பிடமாக கருதப்படும் கிழக்கு ஆப்ரிக்காவிலும் பரிணாம வளர்ச்சி Homo rudolfensis, Homo ergaster, Homo sapiens போன்ற புதிய இனங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தது.
மேற்குறிப்பிட்ட அனைத்து இனங்களிலும் மனிதர்கள் ஒரே குணாதிசயம் கொண்டவர்களாக இல்லை. சில இனங்களில் அவர்கள் உருவத்தில் பெரியவர்களாகவும், பலசாலிகளாகவும், பயமறியா வேட்டையாடிகளாகவும் இருந்தார்கள், சில இனத்தை சார்ந்தவர்கள் உருவத்தில் சிறியவர்களாகவும், தாவரங்களிலிருந்து உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்தார்கள். சிலர் தனித்தீவுகளில் வாழ்ந்தார்கள், சிலரோ கண்டம் விட்டு கண்டம் இடம் பெயர்ந்தார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் ஹோமா என்னும் பேரினத்தைச் சார்ந்தவர்கள், மனிதர்கள்.

பொதுவாக பரிணாம வளர்ச்சியை காலக்கிரமமாக வரிசைப்படுத்தும் போது நேர்க்கோட்டில் வரிசைப்படுத்துகிறோம். அதாவது ஒரு இனம் வாழ்ந்து மறைந்த பிறகே அடுத்த இனம் பரிணமித்திருக்கும் என்ற எண்ணம் அடிப்படையில் தவறானது. உண்மை என்னவெனில் இரண்டு மில்லியன் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த உலகம் ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்களுக்கு தாயகமாக இருந்திருக்கிறது. பொய் என்கிறீர்களா? தற்போது இந்த உலகில் நமது சக உயிரிகளாக வாழும் சிங்கம், புலி, பனிச்சிறுத்தை போன்ற விலங்குகள் Panthera  எனும் ஒரே பேரினத்தைச் சார்ந்தவை, இந்த தர்க்கத்தின்படி பார்த்தால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பூமியில் பல்வேறு இனங்களைச் சார்ந்த மனிதர்கள் வாழ்ந்திருப்பார்கள் தானே.

ஹோமா பேரினத்தைச் சார்ந்த மற்ற உயிரினங்கள் யாவும் காலப்போக்கில் முற்றிலுமாக அழிந்து விட சாப்பியன்ஸ் மட்டும் நிலைத்திருக்க காரணமென்ன? அடுத்த பதிவில்..


Credits: Sapiens - A brief history of humankind by Yuval Noah Harari  Buy at Amazon


Thursday, June 21, 2018

அறிவியல் = இயற்பியல் + வேதியியல் + உயிரியல்

13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பின் (Big Bang) போது பருப்பொருள், ஆற்றல், நேரம், காலம் போன்றவை தோன்றின. நமது அண்டத்தின் இத்தகைய அடிப்படை அம்சங்களைப் பற்றி படிப்பதைத் தான் நாம் இயற்பியல் என்கிறோம்.
அண்டம் தோன்றி மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பருப்பொருளும், ஆற்றலும் ஒன்றுதிரண்டு அணுக்களாயின, அணுக்கள் ஒன்றிணைந்து மூலக்கூறுகளாயின இதனைத் தான் நாம் வேதியியல் என்கிறோம்.
3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியில் சில மூலக்கூறுகள் ஒன்றிணைந்து உயிரினங்கள் தோன்றின, இந்த நிகழ்வினையும், உயிரினங்களின் இயக்கத்தையும் தான் உயிரியல் என்கிறோம்.


ஏறக்குறைய எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமா சாப்பியன்ஸ் எனும் உயிரினங்கள் கலாச்சாரம் என்னும் மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கின, காலச்சக்கரத்தில் கலாச்சார வளர்ச்சியின் தொகுப்பையே வரலாறு என்கிறோம். மனிதகுல வரலாற்றின் வழிநெடுகே மூன்று மிகப்பெரும் புரட்சிகள் நடந்தேறியிருக்கின்றன. எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சிந்தனைப் புரட்சி மனித மனதின் எல்லைகளை விரிவுபடுத்தியது. அதன் பின்னர் ஏற்பட்ட விவசாயப் புரட்சி உணவு தேடுவதில் இருந்த சிரமங்களைப் போக்கி, மனிதகுலம் கலாச்சார கட்டமைப்புகளை உருவாக்க வழிகோலியது. மூன்றாவதாக மிகச் சமீபத்தில் 500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட அறிவியல் புரட்சி மனித குலம் மற்ற எல்லா உயிரினங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி, இப்புவியை தனது தேவைக்கேற்றவாறு மாற்றியமைக்க உதவியிருக்கிறது. இந்த மூன்று பெரும் நிகழ்வுகளும் மனிதர்களிடமும், பிற உயிரினங்களிடமும் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையே இந்த தொடரில் காணப் போகிறோம்.

வரலாறு வரையறுக்கப்படுவதற்கு முன்பே மனிதர்கள் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள். நவீன கால மனிதர்களை ஒத்த  விலங்குகள் இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின. ஆனால் பல நூற்றாண்டுகளாக அவற்றால் எண்ணற்ற வேறு உயிரினங்களின் மீது ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் நட்போடும், அதிகாரத்திற்காக சமர் புரிந்து கொண்டும் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை சிம்பன்சிகளைப் போலவும், யானைகளைப் போலவுமே இருந்திருக்கிறது. அவர்களுடைய சந்ததியினர் பிற்காலத்தில் நிலவில் கால் பதிப்பார்கள், அணுவின் ஆற்றலை கண்டறிவார்கள், மரபணுக் குறியீடுகளை அலசி ஆராய்வார்கள், வரலாற்று புத்தகங்களை எழுதுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் அவர்களிடம் தென்படவேயில்லை.  வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் சுற்றுச்சூழலின் மீது எந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாதவர்களாகவே இருந்தார்கள். 


பரிணாம வளர்ச்சிப் பாதையில் நாம் இப்போது காணும் எல்லா உயிரினங்களுக்கும் பெரும்பாலும் தங்களுடைய மூதாதைய உயிரின பிரிவிலிருந்து தோன்றியவையே. உதாரணமாக நம் வீட்டில் வளரும் பூனையில் இருந்து சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் அனைத்தும் பெலிடே (Felidae) எனும் பூனைக் குடும்பத்தைச் சார்ந்தவை. அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவில் பூனைக் குடும்பத்தில் இன்று நாம் காணும் விலங்குகள் அனைத்தும் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மூதாதய உயிரினத்திலிருந்து தோன்றியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மேற்கூறிய கோட்பாட்டின்படி ஹோமா சாப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதர்களான நமக்கு மூதாதயர்களாக குரங்குகளைச் சொல்லலாம், சிம்பன்சிகள், கொரில்லாக்கள், உராங்குட்டான்கள் போன்றவை நம்முடைய நெருங்கிய உறவினர்கள்.
(1 பில்லியன் = 100 கோடி)    (1 மில்லியன் = 10 இலட்சம்)

மனிதர்கள் எங்கே, எப்படி தோன்றினார்கள்?
மாறுபட்ட குணநலன்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்கள் இப்புவியில் வாழ்ந்தனவா?
பதில்கள்....அடுத்த பதிவில்..


Credits: Sapiens - A brief history of humankind by Yuval Noah Harari  Buy at Amazon

Tuesday, June 5, 2018

வாசிப்போம். #1



 வரலாறு பிடிக்குமா உங்களுக்கு?



பள்ளிப் பருவத்தில் நாம் படித்த வரலாற்று புத்தகங்கள் எல்லாம் அரசுகளின், அதிகார வர்க்கங்களின் வரலாறாகவே இருந்திருக்கிறது. அறிவியல் பார்வையில், மனிதகுல வரலாற்றை படிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். அந்த வகையில் இணைய தேடலின் போது கண்ணில் பட்டது Yuval Noah Harari எழுதிய Sapiens - A Brief History of Humankind.

பொதுவாகவே வரலாற்று நூல்கள் நிகழ்வுகளின் தொகுப்புகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும், பேரரசுகள், சாம்ராஜ்யங்கள், போர்கள் இவற்றையே வரலாறாக படித்திருக்கிறோம். இந்த புத்தகம் ஒட்டுமொத்த மனித குல வரலாற்றை அறிவியல் பார்வையில் அணுகுவதோடு, எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

மனிதகுல வளர்ச்சி என்பது சிந்தனைப் புரட்சி, விவசாய புரட்சி மற்றும் அறிவியல் புரட்சி போன்ற மூன்று பெரும் நிகழ்வுகளை உள்ளடக்கியது என்கிறார் ஹராரி. மதங்களும், கடவுள்களும், மனித உரிமைகளும் மனித மனதின் உருவாக்கங்கள் என்கிறார். முழு புத்தகத்தையும் வாசித்து முடிக்கும் போது  நீங்கள் இது வரைக்கும் கொண்டிருந்த பல நம்பிக்கைகள் கேள்விக்குள் ளாக்கப்படலாம். கேள்விகள் கேட்பதும், விடைகளை தேடுவதும், மாற்றங்களை ஏற்பதும் தானே அறிவியல்.

Monday, April 2, 2018

அத்தகைய நாளொன்றில்...



அத்தகைய நாளொன்றில்...

நீயும் நானும்
நிறுத்தாமல் பரிமாறிக்கொண்டோம்
பேரன்பை...

உன் குறைகளையும் 
என் குறைகளையும் 
மூட்டைக்கட்டி
அந்த ஆழ்கடலின் அலைமீது
வீசியெறிந்தோம்...
அது மூழ்குமோ மிதக்குமோ
எனக்கு கவலையில்லை

ஏன் தெரியுமா
என் கரமெனும் முத்தை
மூடிக்காக்கும் கதகதப்பான சிப்பியாய்
உன் கைககள் இருக்க
எனக்கு கவலையில்லை....

நீண்ட நாள் தனிமையின்  
வலி போக்கியது 
உன் ஆரத்தழுவல்.....

அணைத்தலின் சூட்டைத்தாண்டிய 
பெருங்காதல் கண்டேன்
உன் நெஞ்சில் கை வைத்துப்பார்த்தேன்
பிரிவுத்துயரின் வலி

நான் இல்லாத நாட்களை 
எப்படி கடந்திருப்பாய்.... ?
அணைத்து நடக்கவும்
ஆரத்தழுவவும்
கைகளை பற்றவும்
மடிமீது தூங்கவும்
என்ன செய்திருப்பாய் ?

ஆறாத ரணங்களும், தீராத வலிகளும் 
கண்ணீராய் உருகும் தருணத்தில்
உலகின் அத்தனை அன்பையும்
உன் மீது நான் ஊற்றும் பொருட்டு
தோள் சாய்கிறேன் கண்ணம்மா

அள்ளி அணைத்துக் கொள் 

படம்: கேமரா கண்கள்

கவிதை: முகநூல் பதிவர் ஒருவர் எழுதியது, சிறிய மாற்றங்களுடன்